ரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை - தமிழரசு ஏற்கமறுப்பு
நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைக்கவேண்டும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் உடன் வழங்கவேண்டும் என்பன உட்பட 5 நிபந்தனைகளை நிறைவேற்ற ரணில் இணங்கினால் மட்டுமே அவருக்கு ஆதரவளிக்கக் கூட்டமைப்பு இணங்க வேண்டும் என்று ரெலோ அமைப்பின் செயலாளர் ந.சிறிகாந்தா வலியுறுத்தியிருந்தார்.
அது பற்றிப் பேசுவதற்காகக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழு உடன் கூட்டப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து உயர் மட்டக் குழு கூட்டப்பட்டபோதும் அதில் இது தொடர்பில் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை, நாளைமறுதினம் 7ஆம் திகதி மீண்டும் கூடி இது பற்றி விவாதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் முடிவை ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எடுத்திருந்தது. ரெலோ அமைப்பின் செயலர் ந.சிறிகாந்தா இதனைக் கடுமையாக எதிர்த்திருந்தார். இப்படிப்பட்டதொரு முக்கியமான கொள்கை முடிவை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எடுக்கக்கூடாது என்றும் அதனை கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவே எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில் கூட்டம் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும், ஆர்.ராகவனும், ரெலோ சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ந.சிறிகாந்தா, வினோநோதராதலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்கேற்றனர்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரெலோ அமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அது அமையவேண்டும் என்று வலியுறுத்தியது. அவற்றுள் மிகச் சிலவற்றை முயற்சிப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தர் இணங்கினார் என்றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டிய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறும் ரெலோ அமைப்பு அழுத்தமாகக் கோரியுள்ளது. நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னர் அதைப் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு முடிவுகளும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மீண்டும் சந்தித்துப் பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment