புளொட், ஈபிஆர்எல்எவ் தமிழ் மக்கள் பேரவையில் நீடிக்கும்

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கை, நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென நேற்று நடந்த பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன்,

“பேரவையில் இருந்து சில கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென ஒரு கட்சி விடுத்த கோரிக்கை தொடர்பிலும்  கூட்டத்தின் போது ஆராயப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு சுமூகமான முடிவிற்கு நாங்கள் வந்துள்ளோம். இதனடிப்படையில் பேரவைக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் இத்துடன் நீங்குமென்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பேரவையில் இருந்து இரண்டு கட்சிகளை வெளியேற்ற வேண்டுமென ஒரு கட்சி கோரியிருந்த நிலையில் அந்த இரு கட்சிகளதும் விளக்கமும் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில்  இது சம்மந்தமாக இரு தரப்பாரும் தங்களுடைய விளக்கத்தை அறியத் தந்ததால் அதனை ஏற்றுக் கொள்வதென ஒரு முடிவிற்கு நாங்கள் வந்திருக்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments