மன்னார் புதைகுழி:காணோமல் ஆக்கப்பட்ட தமிழர்களதே?


மன்னார் மனித புதைகுழியானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினது எனபதற்கான சான்றாதாரங்கள் தொடர்ந்தும் அகப்பட்டுவருகின்றது.

112 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்ற அகழ்வின் போது இரும்பு கம்பி அல்லது விலங்கு அணிந்திருந்ததாக நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்று மதியம் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் அல்லது விலங்கிடப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் என்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடைய பொருட்களும் மீட்;கப்பட்டு வருகின்றது.

இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments