உதவிக்கு அழைக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!


வடமாகாணத்தில்  பெய்துள்ள தொடர் அடை மழைகாரணமாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும்,கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம்,மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமானக.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் மாற்று உடை இன்றி பெரிதும் அவதிப்படுவதாகவும் அதனால் அவர்களுக்கான மாற்று உடைகளை வழங்குவதற்கான உதவிகளையும்   அடுத்த சில நாட்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு பொருட்களையும் வழங்கி உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  குழந்தைகளுக்கான நுளம்பு வலைகள் மற்றும் பால் மா ஆகியவற்றுக்கான தேவையும் பெருமளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றையும் வழங்கி உதவுமாறும் அவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் உடை ஆகியவற்றை வழங்கும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் கூட்டணி மேற்கொண்டுள்ளதாகவும், அதே போல வேறு பல அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருப்பதால் தமக்கு வசதியான வழிகளில் தமது உதவிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முக்கியமாக மக்களின் கொடைகள் தேவையுடையோர் கைகளில் கிடைக்கவேண்டுமென்பதை ஊர்ஜிதப்படுத்துவது எல்லோரதும் கடமையாகும் என்று கூறியுள்ளார். 

பொருட்கள் கொழும்பில் பொட்டலங்கள் ஆக்கப்பட்டு கிளிநொச்சிக்கு அனுப்பப்படவிருக்கின்றன. முன்னாள் முதல்வர் அவர்கள் இம் மாதம் 26ந் திகதி காலை கிளிநொச்சியில் வைத்து உதவிப் பொருட்களை தேவை உடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட பெறுநர்களிடம் திரு.அருந்தவபாலனுடனும் மற்றைய கூட்டணிஅங்கத்தவர்களுடனும் கொடையினர்களுடனும் சேர்ந்து கையளிக்க உள்ளதாகவும் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments