யாழ் நீதிமன்றில் கைதிக்கு போதைப்பொருள் கைமாற்றியவர் கைது

யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றியசந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சிக்கிக்கொண்டார்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது. அதில் சிறைக் கைதி ஒருவர் முற்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரும் மன்றில் முன்னிலையானார். அவர் இந்த வழக்கில் பிணையில் உள்ளார்.

வழக்கு விசாரணை நிறைவடைந்தவுடன் வழக்கின் எதிரிக் கூண்டிலிருந்த கைதியிடம் மற்றைய சந்தேகநபர் சிறிய சரை ஒன்றை கைமாற்றிக்கொண்டதை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டுள்ளார். அவர் அதனைத் தடுக்க முற்பட்ட போது சரையைக் கொண்டு வந்தவர் அதனை எதிரிக் கூண்டுக்குள் போட்டுள்ளார்.

விரைந்து செயற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் முகுந்தன், அந்தச் சரையை எடுத்து சம்பவம் தொடர்பில் நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். சரையை ஆராய்ந்து அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றப் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.


நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் சரையை ஆராய்ந்த போது, அதற்குள் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை கண்டறியப்பட்டு நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுவந்தவரைக் கைது செய்து விசாரணைகளைக்கு உள்படுத்தி மன்றில் முற்படுத்துமாறு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு உத்தரவிட்டார்.

ஹொரோயினைஎடுத்துவந்தவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

No comments