அரியாலையில் வங்கி முகாமையாளர் வீட்டில் வாள்வெட்டு


யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே நேற்று வியாழக்கிழமை இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது....

குறித்த வீட்டிற்கு நேற்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் முகமூடிகளை அணிந்து வாள்களுடன் சென்றுள்ளனர். இதன் போது வீட்டின் முன்பாக இருந்த மின்குமிழை அடித்து உடைத்ததுடன் 

வீட்டின் முன்பக்க கதவையும் வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் இரண்டு பேர் வாள்களுடன் வீட்டின் மதிலை பாய்ந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

இவ்வாறு வாள்களுடன் உள்ளே சென்றவர்கள் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினை முற்றாக அடித்து உடைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து வீட்டின் ஐன்னல்கண்ணாடிகளையும் அடித்து  நொருக்கியுள்ளனர்.

ஆயினும் இதன் போது வீட்டிலிருந்தவர்கள் அச்சம் காரணமாக வெளியேவரவில்லை. இவ்வாறு கார் மற்றும் வீட்டை அடுத்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டனர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இதனையடுத்தே வீட்டுக்காரர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments