இறாலை தந்து திமிங்கிலம் பிடிக்கின்றனர்:சி.வி?

எம் மண்ணின் மைந்தர்கள் வளம் அற்றிருக்க, வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை இன்று உதயமாகி விட்டது. இறாலைத் தந்து திமிங்கிலத்தை அறுவடை செய்வதே அவர்கள் குறிக்கோள். நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. காபந்து அரசாங்கத்தினர் கரவாக என்ன செய்வார்கள் என்பதை இருந்து தான் பார்க்க வேண்டுமென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் இன்று சனிக்கிழமையன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றிருந்தது.

அங்கு உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் எனது பதவிக்காலம் முடிந்த பின் நான் பிரசன்னமாகும் முதல்ப் பொதுக்கூட்டம் இது. எனது இவ்வாறான கூட்டமானது ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையில் பிரகடனப்படுத்தியிருக்கும் மரநடுகை மாதக் கூட்டமாக அமைந்திருப்பது சாலச் சிறந்ததே. 

அதுவும் இந்தக் கூட்டத்தில் தனக்கென, தன் மக்களுக்கென சிறப்பான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கலாநிதி தொல். திருமாவளவன் கலந்து கொள்வது எமக்கெல்லாம் பெருமையைத் தருகின்றது. அவரின் கட்சியின் பெயர்தான் பயம் ஊட்டுவதாக அமைந்தாலும் வளவன் வளமான ஒரு மனிதர் என்று எனக்கு வர்ணிக்கப்பட்டுள்ளார். அவருடன் இரண்டு மணித்தியாலங்கள் இன்று என் வாஸஸ்தலத்தில் வைத்துப் பேசியதில் அதை உணர்ந்து கொண்டேன். அவரை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சியடைகின்றேன். 

மரம் நட்டால் வளர்ந்து பயன் தரும். நான் ஒரு கட்சியை நட்டுள்ளேன். வருங்காலத்தில் அது வளர்ந்து மக்களுக்குப் பயன் தரும் என்று எதிர்பார்க்கின்றேன். வருங்கால இளைய தலைவர்களை அது உருவாக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். அக் கட்சியைப் பாதுகாத்துப் பராமரிக்க மக்களாகிய உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன். இந்தக் கூட்டத்தை அரசியல் கூட்டமாக மாற்ற நான் விரும்பவில்லை. ஆகவே இத்துடன் என் கட்சி பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்கின்றேன். 

பொதுமக்கள் யாவரும் இணைந்து சுற்றுச் சூழலில் ஆர்வங் காட்டும் இக் கூட்டமானது வருடா வருடம் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அது தொடர்ந்து வருடா வருடம் பயன்தர வாழ்த்துகின்றேன். இவ்வாறான கூட்டங்கள் எம்முள் சுற்றுச் சூழல் சம்பந்தமான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றேன். மாரி தொடங்கியதும் எங்கும் பசுமையைக் காண்கின்றோம். “வாராதா மழை?” என்று வருடம் பூராகவும் ஏங்கி நின்ற புல், பூண்டு, பயிர்கள், மரங்கள் ஆகியன பச்சை நிறம் பூண்டு காட்சி அளிக்கின்றன. ஏன் பறவைகள், ஜந்துக்கள், மிருகங்கள், மனிதர்கள் கூட வரவேற்று நிற்கும் வருடத்தின் இக்காலகட்டந் தான் வருங்கால பசுமைக்கு வித்திடுங் காலம். இப்பொழுது நடப்படுந் தாவரங்கள் மழையின் அனுசரணையுடன் துளிர்க்கத் தொடங்கி விட்டால் பின்னர் தாமாகவே தழைக்கத் தொடங்கி விடுவன. ஆனால் பின்னர் வரும் கோடைகாலத்தில் மழை பெய்யாவிடில் பல மரங்கள் அழிந்து போவதும் உண்டு. அதனால்த்தான் மரங்களை நட்டுப் பாதுகாக்கவும், வளர்க்கவும், அதனூடு எமது சுபீட்சமான வாழ்வைப் பெறவும் மக்களாகிய எமது கடமை என்ன என்பதைப் புரிந்து கொள்ள, இவ்வாறான மரநடுகை நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

வடமாகாண கிழக்குமாகாண மக்களின் அன்றைய நிலை வேறு இன்றைய நிலை வேறு. போரானது மிரட்டுவோரையும், சுரண்டுவோரையும், கரவாகக் கவர்வோரையும் வகைதொகையின்றி எம் மண்ணில் கால் பதிக்க வழி அமைத்துவிட்டது. எம் மண்ணின் மைந்தர்கள் வளம் அற்றிருக்க, வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை இன்று உதயமாகி விட்டது. இறாலைத் தந்து திமிங்கிலத்தை அறுவடை செய்வதே அவர்கள் குறிக்கோள். நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. காபந்து அரசாங்கத்தினர் கரவாக என்ன செய்வார்கள் என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும். 

நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் எமக்கென பல இலட்சம் செலவு செய்வதாகக் கூறி கிடைக்கும் நிதிகளிலே அவர்களின் நிறுவன நிர்வாகத்திற்கே ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் அடித்துக் கொண்டமை நீங்கள் அறியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதற்காக பன்னாட்டுப் பணிகள் இங்கு பரவலாக வேண்டாம் என்று நான் கூறவரவில்லை. பன்னாட்டில் இருந்து பணியாற்ற வந்தோரின் பணி பற்றிப் பரிசீலிக்க எமக்குப் பலம் காணாமல் இருப்பதைக் குறிப்பிடுகின்றேன். 

எமது சூழலியல் வளங்களைப் பாதுகாக்கின்ற பணிகளை மத்திய அரசு தொடர்ந்து  தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்றது. எமது சூழல் வேறுபட்டதொன்று என்பதைத் தெரியாமலேயே, புரியாமலேயே எமது சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை வேற்றான் தான் ஏற்றுக்கொண்டுள்ளான். எமது நில அமைப்பு, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் ஏனைய மாகாணங்களின் நிலப் பண்புகள் பண்பாட்டு நியமங்களில் இருந்து நில அமைப்பு, வாழ்முறை, வழக்கம், விழுமிய வழிமுறைகளால் வேறுபட்டவை என்பதை அவர்கள் புரியாமலேயே இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள். உதாரணத்திற்கு வேற்று மாகாணங்களில் நதிகள் உண்டு. ஆனால் வடமாகாணத்தில் நிலத்தடி நீர் மட்டுமே உண்டு. சூழலால் எமது சிந்தனைகளும் மாறக் கூடும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த வேற்றுமை பற்றி ஒரு உதாரணம். நான் நீதிபதியாக நாடெங்கிலும் வலம் வந்த காலத்தில் எமது கொழும்பு வீட்டை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தோம். அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்தவர்கள். எமது சிறிய பின் வளவில் பசுமை நிறைந்த செடிகள் பல உண்டாக்கியிருந்தோம். அவை கண்ணுக்குக் குளிர்ச்சி அளிப்பதாகவும் சூழலுக்கு நிழல் தருவதாகவும் மனதிற்கு இதம் அளிப்பதாகவும் இருந்தன. அவை பற்றி எதுவும் பேசாமலே நாங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டோம். பின்னொரு நாளில் அவர்கள் குடியிருந்த எமது வீட்டைப் பார்வையிடச் சென்ற போது பின்வளவில்  பச்சை நிறமே காணாமல்ப் போய் இருந்தது. “எங்கே எமது பசுமையான பின் வளவு?” என்று கேட்டேன். “ஓ அதுவா? நுளம்புகள் வருமென்று அவற்றை எல்லாம் அழித்து விட்டேன்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினார் எனது வாடகைக் குடியிருப்பாளர். “என்னிடம் அது பற்றிக் கூறியிருக்கலாமே. உங்களுக்கு வேண்டுமென்றால் நுளம்பு வராதிருக்க வலையொன்றை உங்கள் யன்னல்களுக்குப் போட்டுத் தந்திருப்பேனே?” என்றேன். “அதை நான் பெரிதாக எண்ணவில்லை. எப்படியும் யன்னலுக்கு வலையை நானே அடித்துள்ளேன்” என்றார். “அட கடவுளே! வலையையும் போட்டுவிட்டு மனு~ன் பசுமையையும் அகற்றியுள்ளானே!” என்று எனக்குள் மனவருத்தம். அப்பொழுது தான் நான் புரிந்து கொண்டேன். வனாந்தரத்தில்ப் பிறந்து வளர்ந்தவர்கள் பசுமையை அதிகம் மதிப்பதில்லை என்பதை. ஆனால் இஸ்ரேல் நாடு தமது வனாந்தர மண்ணில் பாரிய பசுமையை செயற்கையாக உண்டாக்கி வருகின்றார்கள். குடியிருந்தவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர் அல்ல. சிலரின் பின்புலம், வாழும் முறை, வாழ் நியமங்கள், விழுமியங்கள் எம்மோடு ஒத்துப் போக வேண்டிய அவசியமில்லை என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். 

எமது தெற்கத்தைய மக்களை நான் வனாந்தரம் வாழ் மக்களாகக் கணிக்கவில்லை. ஆனால் தெற்கிலிருந்து இங்கு எம்மைப் பாதுகாக்க என்று வருபவர்களின் மனோநிலை வேறு விதமாக அமைந்திருப்பதை நான் கண்;டுள்ளேன். வடக்கில் இருந்து, கிழக்கில் இருந்து எதனைச் சுருட்டிச் செல்லலாம் என்றே அவர்கள் மனோநிலை இருப்பதைக் கண்டுள்ளேன். எம்முட் சிலரும் சூழலைத் தமது சுரண்டலுக்குப் பாவிக்கவே நினைக்கின்றார்கள். 
நாம் இயற்கையின் ஒரு அங்கமே. இந்த உலகில் நாமும் ஒரு உயிர் வாழ் இனமே. நாம் எம்மைச் சுற்றியுள்ளவற்றை அழித்தால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும். உதாரணத்திற்கு சுவரில் பதியும் நுளம்புகளைப் பல்லிகள் தின்கின்றன. பல்லிகள் எல்லாவற்றையும் அழித்தோமானால் நுளம்புகள் கணக்கின்றிப் பெருக நாம் வழிவகுப்பதாக அமையும். அது எம்மையே பாதிக்கும். 

இயற்கை உயிரியல் ரீதியாக ஒரு சமநிலையைக் கடைப்பிடித்து வந்துள்ளது. ஆனால் மனிதன் அந்த சமநிலையை மாற்றி அமைக்கப் பார்க்கின்றான். அண்மைக் காலங்களில் எமது பகுதிகளில் காணப்பட்ட பெரிய மரங்களும் விருட்சங்களும் வகைதொகையின்றி வெட்டி அழிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் காரணமாகத்தான் மழைவீழ்ச்சி சென்ற சில வருடங்களில் வெகுவாகக் குன்றிப் போய் விவசாயப் பயிர்ச்செய்கை மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கை, மரக்கறி வகைகள் உற்பத்தி ஆகியன வீழ்ச்சி அடைந்தன. போர்க்காலப் பசுமை அழிவு தொடர்ந்தும் நடைபெறுவதை நாம் விடலாகாது. மழைநீர் வர மரங்கள் அத்தியாவசியம் என்பதுடன் மரங்களே பல உயிரினங்களுக்கு வாழ்விடங்களுமாவன. அதை நாம் மறக்கக் கூடாது. அத்துடன் பவனத்துடன் சேர்ந்து அதிகரித்துச் செல்லும் கரியமில வாயுவை உறிஞ்சி எடுப்பதற்கும் மரங்கள் அவசியம்.

நவீன இலத்திரனியல் கருவிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக எமது பகுதியில் காணப்பட்ட சிட்டுக்குருவி போன்ற பல சிறிய பறவையினங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இது வருத்தத்திற்குரியது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் மூளை வளர்ச்சி கூட பாதிப்படையும். தினமும் பல இலட்சக்கணக்கான நுண் அலைகள் குறுக்கும் நெடுக்குமாக எம் மத்தியில் பயணித்த வண்ணமாக உள்ளன. இதை நாங்கள் உணர்வதில்லை. இவை குழந்தைகளின் மூளைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன. 

வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்த நுண்ணலைகளின் தாக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அந்த நாட்டின் அரசாங்கங்கள் ஏற்ற பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. எனினும் எமது பகுதிகளில் தேவைக்கு அதிகமாக இந்தப் பாவிப்பானது ஒரு நவீன கலாச்சாரமாக மாறியிருப்பது வேதனைக்குரியது. பாடசாலைக்கு செல்கின்ற ஒரு சிறு பிள்ளையின் கையில் கூட அன்ரோயிட் கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. இவற்றின் தேவைகள் பற்றியும் இத்தொலைபேசிகள் சமூக கலாச்சார விழுமியங்களில் ஏற்படுத்தக் கூடிய பாரிய தாக்கங்கள் பற்றியும் இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் அறிந்துள்ளார்களோ நாம் அறியோம். வளர்ச்சியடைந்துள்ள இந்த இலத்திரனியல் யுகத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதென்பது இயலாத காரியம். எனினும் இந்த இலத்திரனியல் சாதனங்களை எம்மில் இருந்து எவ்வளவு தூரத்தில் வைத்திருக்கவேண்டும், எங்கு வைத்திருக்க வேண்டும்; அதன் பயன்பாடுகளை எவ்வாறு மட்டுப்படுத்த முடியும் என்பன பற்றி பொதுமக்கள் அறிவூட்டப்பட வேண்டும். 


அண்மையில் ஒரு அன்பர் என்னைப் பார்க்க வந்தார். தனது கைத்தொலைபேசியை அவர் சற்றுத் தூரத்தில் வைத்துவிட்டுப் பேசினார். அதை நான் அவதானித்ததைக் கண்டுவிட்டு தனது கதையைச் சொன்னார். “எனக்குத் தொடர் தலையிடி ஒன்று வந்து கொண்டே இருந்தது. பல மேலை நாட்டு வைத்திய மருத்துவர்களைக் கண்டு கேட்டேன். மருந்து உட்கொண்டேன். பயனில்லை. தற்செயலாக தமிழ் வைத்திய மருத்துவர் ஒருவருக்கு இது பற்றிக் கூறினேன். அவர் என் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துவிட்டு படுக்கப்போகும் போது தொலைபேசியை எங்கு வைத்து விட்டுப் படுக்கின்றீர்கள்?” என்று கேட்டார். “தலையணைக்குப் பக்கத்தில். ஏனென்றால் யாராவது அவசரமாகத் தொலைபேசியில் பேசக்கூடும் என்பதற்காக” என்று கூறினார் நண்பர். மருத்துவர் “ஐயா! நீங்கள் மூன்று நாட்களுக்கு உங்கள் தொலைபேசியை தூர வைத்துவிட்டு உறங்கி எழுந்து பாருங்கள். இவ்வாறு செய்துவிட்டு மூன்று நாட்களின் பின்னர் என்னை வந்து சந்தியுங்கள்” என்றாராம். அதன் பின் அவருக்கு அந்தத் தலையிடி இருந்த இடந் தெரியாமல் போய்விட்டது என்றார். 

ஆகவே நம்மை அறியாமலே நாங்கள் எங்களுக்குப் பல பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றோம். 

அண்மையில் ஒரு நாட்டு வைத்தியர் ஒரு முக்கியமான விடயத்தை எனக்குச் சுட்டிக்காட்டினார். 

“சேதனப் பசளையால்; ஆன மரக்கறிகளை நாம் இங்கு விற்கின்றோம்” என்று பதாகைகள் ஒட்டிப் பல மடங்கு அதிகம் விலையில் சில விற்பனையகங்கள் மரக்கறி விற்பதைப் பார்த்திருப்பீர்கள் என்றார் அவர். “ஓம்” என்றேன் நான். “சேதன உரத்தில் விளைந்த மரக்கறிகளை இந்த விற்பனையாளர்கள் வரவழைத்து அந்த மரக்கறிகளை பல நாட்கள் பழுது படாது வைத்திருக்க என்ன செய்கின்றார்கள் என்று தெரியுமா?” என்று கேட்டார். “இல்லை” என்றேன். “கெமிக்கல் இல்லாத உரத்தைப் பாவித்து பயிர் உற்பத்தி செய்துவிட்டு அதே கெமிக்கல் வர்க்க மருந்துகளைத் தடவியே மரக்கறிகளைப் பல நாட்கள் தமது விற்பனையகங்களில் பார்வைக்கும் பாவனைக்கும் அடுக்கி வைத்திருக்கின்றார்கள் தெரியுமோ?” என்றார். பணத்தைக் கூட்டிக் கொடுத்து வாங்கப்படும் அப்பளுக்கற்ற அந்த மரக்கறிகள் கூட கெமிக்கலுக்கு அடிமையாவதை அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆகவே எமக்குத் தெரியாமலே எமது சூழல் எம்மைப் பாதித்து வருகின்றது. பாதிப்புக்களை அறிந்திருப்பது அத்தியாவசியம். சுப்பர் மார்க்கட்டுக்களுக்கு சென்றால் அங்கு வேலை செய்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள் எவ்வாறு தமது மரக்கறிகளை அத்தனை அழகாக பதம் கெடாமல் பார்வைக்கு வைத்திருக்கின்றார்கள் என்று. அப்போது உண்மை வெளிப்படும். 

எங்கள் பூர்வீகத்தைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இயற்கையை நேசிக்கின்ற இயற்கையோடு ஒன்றிய ஒரு சமூகமாகவே எமது முன்னோர்கள் இருந்தார்கள். மண்ணோடு வாழ்பவர்கள் மரத்தோடு வாழவே விரும்புவார்கள். கடல் நீரோடு வாழ விரும்புபவர்கள் மீனோடு வாழவே விரும்புவார்கள். ஆனால் நெருப்போடு வாழ விரும்புபவர்கள்தான் பட்டணத்தில் மின்னோடு வாழ விரும்புகின்றார்கள். மின்சாரம் கைகொடுத்தால்த்தான் அவர்களுக்கு வாழ்வுண்டு. எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் மண்ணோடும் நீரோடும் வாழ விரும்புவர்கள். ஆனால் இன்று மின்னோடு வாழப் பழக்கப்பட்டு வருகின்றோம்.

சுமார் அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் எனது உறவினரான ஒரு ஓய்வு பெற்ற வெள்ளையர் காலத்து வன்னியினார் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். வன்னியனார்கள் அந்தக் காலத்து அரசாங்க அதிபர்கள் போன்றவர்கள். தமிழ் நாட்டில் அவர்களைக் கலெக்டர்கள் என்பார்கள். சிறிய இடமொன்றுக்குக் கலெக்டர்கள் அவர்கள். நல்ல வசதி படைத்தவர் என் உறவினர். அந்தக் காலத்தில் அழகானதொரு மலசல கூடத்தினை தனது வாஸஸ்தலத்துக்கு அருகில் அவர் அமைத்து வைத்திருந்தார். ஆனால் காலையில் அவர் அதனைப் பாவிப்பதில்லை. அதிகாலையிலேயே வெளியே சென்று விடுவார். இது எனக்குப் புரியாத புதிராக இருந்தது. அப்போது நான் கல்லூரி மாணவன். ஒரு நாள் அவரிடம் அது பற்றிக் கேட்டே விட்டேன். “ஐயா! இத்தனை அழகான மலசலக்கூடம் அமைத்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் அதைப் பாவிப்பதில்லையா?” என்று கேட்டேன். “இல்லை! இது உன் போன்று கொழும்பில் இருந்து வருபவர்களுக்கு. எங்களுக்கு அது பழக்கமில்லை. நாங்கள் குளத்த போய் சுற்றுச் சூழலைப் பார்த்துக் கொண்டே அவற்றை இரசித்துக் கொண்டேதான் மலசலம் கழிப்போம்.” என்றார். “கழித்து விட்டு குளத்தில் போய் கழுவி விட்டு வருவதால்த்தான் “குளத்த போய் வாரன்” என்று கூறுவது வழக்கம்” என்றார். நாங்கள் நாற்சுவர்களைப் பார்த்துச் செய்வதை எம்முன்னோர் இயற்கையைப் பார்த்து இரசித்து அதனோடு ஒன்றியே செய்தனர். மிக அந்தரங்கமான ஒரு விடயத்தையும் இயற்கையுடன் ஒன்றியே செய்தார்கள். 

அதனால்த்தான் நான் கூறுகின்றேன் நாம் இயற்கையை நேசித்த, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஒரு சமூகம் என்று. இயற்கையில் பிறந்த நாம் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை ஏன் எமது முழு வாழ்க்கை முறையே செயற்கைபால் சார்ந்து விட்டது. எமது வாழ்க்கை செயற்கையின் சிறைக் கைதியாகிவிட்டது. ஆனால் நாம் இன்று இழைக்கின்ற செயற்கைபால்பட்ட தவறுகள் எமது வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கி விடும் என்பதை மறக்காதீர்கள். இன்று அதிகாலையில்த் தான் ஒரு ஈமெயில் வந்தது. புற்றுநோய் ஒரு நோயேயல்ல. வெறும் விட்டமின் டீ17 ன் குறைபாடே புற்றுநோய் என்று. இதனை மேலை நாட்டு வைத்தியர்கள் ஏற்காவிடினும் சூழலில் உள்ள குறைபாடுகள் நோய்களை வருவிப்பதை இந்த ஈமெயில் வலியுறுத்தியுள்ளது. 

அந்த வகையில் இந்த மரநாட்டுவிழா நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். சூழலை நேசிக்கின்ற சூழலியலாளராக விளங்குகின்ற கௌரவ பொ.ஐங்கரநேசன் அவர்கள் வருடா வருடம் கார்த்திகை மாத மரநாட்டு நிகழ்வுகளில் புதிய புதிய சிந்தனைகளை மக்களிடையே விதைத்து வருவது போற்றுதற்குரியது. மூன்று வருடங்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் வடமாகாணம் முழுவதும் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நிகழ்வுகள் நடைபெற்றன.  யாழ் செம்மணிப் பகுதியில் உள்ள ஏரியின் உள்ளும் மரங்களை நாட்டி சாதனை புரிந்தார். ஒரு சில கன்றுகளைத் தவிர அவையாவும் இன்று சிறப்பாக வளர்ந்து வருகின்றன. காரைநகர் பொன்னாலை பாலத்தின் இருமருங்கிலும் கண்டல் செடிகளை நாட்டி அவை தற்போது கண்டல் மரங்களாக வளரக்கூடிய அளவுக்கு உருப்பெற்றிருக்கின்றன.

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த வருட மரநடுகைமாத சிறப்பு நிகழ்வுகளாக மரநடுகையும் மலர்க்கண்காட்சி நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இந் நிகழ்வுகளில் வடமாகாணத்தில் உள்ள தாவர உற்பத்தியாளர்கள் மற்றும் பழ மர விற்பனையாளர் சங்கங்கள் பங்கேற்றுக் கொண்டு தமது உற்பத்திகளை கண்காட்சிக்கு வைப்பதும் அவற்றை விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் இதே இடத்தில் இன்று முதல் 17.11.2017 வரை தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெற இருக்கின்றது. பொதுமக்களுக்கு நல்ல இனக் கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவும் அதே போன்று உள்;ர் உற்பத்தியாளர்களின் சந்தை வாய்ப்பை வளப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் இவை அமையவிருக்கின்றன.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு பத்திரிகையில் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மேற்கோள்கள் நாளாந்தம் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. இதனை ஒழுங்கு செய்த நண்பர் ஐங்கரநேசன் அவர்களும் பிரசுரிக்கும் பத்திரிகைகளும் பாராட்டுக்குரியவர்கள். அந்தப் பிரசுரங்களின் ஒரு கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பின்வருவாருமாறு கூறியுள்ளார். 

“நாகரிகத்தின் வேர் காடுகள்தான். கூட்டங்களில் இருந்து
விலகியிருந்து மரங்களுடன், ஆறுகளுடன், ஏரிகளுடன்
ஒன்றாய்க் கலந்திருந்த மனிதர்களிடம் இருந்துதான்
தலைசிறந்த கருத்துக்கள் வெளி வந்துள்ளன. காடுகளின் அமைதி
மனிதனின் அறிவாற்றல் பெருக உதவியுள்ளது” என்றார் அவர்.

இது உண்மையானது. அமைதியில் இருந்து தான் அதி முக்கிய அறிவாற்றல்த் துளிகள் சிதறி வருகின்றன. இயற்கையின் அமைதி மனிதனில் அவனின் அறிவாற்றலைப் பெருகச் செய்துள்ளது. அந்த அமைதி மரங்களுடன், ஆறுகளுடன், ஏரிகளுடன், மலைகளுடன் ஒன்றாய்க் கலந்திருப்பதால் ஏற்படுகின்றது. 

ஆகவே இயற்கையை நாடுவோமாக!
மரங்கள் பல நடுவோமாக!
அன்பைப் பரப்புவோமாக!
அமைதியைப் பேணுவோமாக!

இயற்கை எமது இறைவனாக மாறட்டும். மரங்கள் எமது கோயில்களாக மாறட்டும். மரமொன்றை நாட்டுவது கோயில் ஒன்றைக் கட்டுவதற்குச் சமம் என்று கூறி பதவி என்ற பாரம் போன பின்னரும் என்னைப் பாத்தியம் பாராட்டி அழைத்தமைக்கு நன்றி கூறியுள்ளார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.

No comments