சிங்கக்குட்டியை வீட்டில் வைத்திருந்தவர் பிரான்சில் கைது!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் ஒருவர் வீட்டில் சட்ட விரோதமாக சிங்கக்குட்டி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிறந்து 6 வாரங் களே ஆன அந்த பெண் சிங்கக் குட்டியை அவர் சுமார் 11 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சிப்பதாகவும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். அந்த வீட்டில் அவர்கள் சிங்கக்குட்டி இருப்பதைக் கண்டனர். அந்த சிங்கக்குட்டி நல்ல ஆரோக்கியமாகவும் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து அந்த சிங்கக்குட்டியை அவர்கள் கைப்பற்றி, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சிங்கக்குட்டியை சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த 30 வயதான ஆண் ஒருவரை அவர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். அவர் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

பாரீஸ் நகரில் சட்ட விரோதமாக வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்து ஒருவர் பிடிபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அங்கு ஒரு காலி வீட்டில் ஒருவர் சிங்கக்குட்டியுடன் ‘செல்பி’ படம் எடுத்தபோது பிடிபட்டார். அந்த சிங்கக்குட்டி தென் ஆப்பிரிக்க காட்டில் இருந்து வந்தது தெரியவந்து, பின்னர் அங்கு கொண்டு போய் விடப்பட்டது. 

No comments