விடுதலைக்கான நடைப்பயணம் - பாடசாலை மாணவர்களும் இணைவு


அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பித்த நடைபயணம் தற்போது புளியங்குளத்தைச் சென்றடைந்துள்ளது.

அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் குறித்த நடைபயணம் முன்னெடுக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் இன்று காலை(11) மாங்குளம் பகுதி ஊடாக முன்னெடுக்கப்பட்ட போது மாங்குளம் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள், அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வலுச் சேர்த்தனர்.

அத்துடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 15 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் மாங்குளத்திலிருந்து புளியங்குளம் வரையான நடைபயணத்தில் பங்கேற்றுத் தமது பூரண ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மூன்றாவது நாளாக மிகுந்த உற்சாகத்துடன் மேற்படி நடைபயணத்தில் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments