17 ஆம் திகதி தீர்க்கமான முடிவு கிடைக்கும் என்கிறார் சம்பந்தன்


அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர், நீதியமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களில் எந்த முடிவும் எடுக்கப்படாமை குறித்து சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த விவகாரத்துக்கு அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வலியுறுத்தினர்.

அரசியல் கைதிகள் 10 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா ஜனாதிபதி, எதிர்வரும் 17ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், இதுகுறித்து பேச்சு நடத்தி தீர்வு ஒன்றை எட்டலாம் என்று உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை தொடர்பு கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதியிரின்  உறுதிமொழியை தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன், போராட்டத்தைக் கைவிடுமாறும், கோரியுள்ளார்.

No comments