போலி நாணயத்தாள்களுடன் பொன்னாலையில் இருவர் கைது


போலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்த இருவரை  பொன்னாலைப் பகுதியில் வைத்து   வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி நாணயத்தாள்களை இருவர் கடத்திச் செல்கின்றனர் என்ற தகவல் கடற்படையினர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நேற்று(11)  மாலை வழங்கப்பட்ட தகவலை அடுத்து  பொன்னாலைப் பகுதியில்  வீதிச் சோதனை நடவடிக்கையை பொலிஸார்  முன்னெடுத்தனர்.

 அதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமாக  பயணித்த இருவரை  சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்து பயணித்தவரின் காற்சட்டைப் பையிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டன. ஆயிரம் ரூபா தாள் ஒன்றும் ஏனையவை 21  ஐந்தாயிரம்  ரூபா போலி நாணயத்தாள்களாக இருந்தன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் சுன்னாகம் தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக உள்ளார். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அவர் கொலை வழக்கு ஒன்றில் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்.
மற்றையவர் பண மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர். சந்தேகநபர்கள் இருவரும் சிறைச்சாலைக்குள் நட்புக் கொண்டனர். அவர்களால் நல்லூர்ப் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்களும் மீட்கப்பட்டன.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள்  மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்  என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments