சிறுவர் போராளி 26வருட சிறையில்:உத்தரவிட்ட கருணாவோ அமைச்சர்?

தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் ஆணையிட்டவர் அமைச்சராக வெளியில் உள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கைதடியில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் வெளியாகின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை என்கிறார்.

ஆனால் அரசியல் ரீதியான தனிச்சட்டம் ஒன்றின் ஊடாக குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் சிறையில் உள்ளனர்.  அதனை எடுத்து கூறி அவர்கள் அரசியல் கைதிகள் தான் என்பதை நாம் கூற வேண்டும்.

கருணாவின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். ஆனால் கருணா வெளியே அமைச்சராக இருக்கின்றார். 

சிறுவர் போராளியாக இருந்த அவருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சட்டத்துக்கு புறம்பான சட்டமே பயங்கரவாத தடுப்பு சட்டம். அப்படி இருக்கையில் புதிதாக வரவுள்ள சட்டம் சட்டரீதியான சட்டம் எனில் அவர்களை உள்ளடக்க முடியாது.

பாதீட்டை எதிர்ப்போம் அரசியல் கைதிகளை விடுவித்தாலே ஆதரவு தருவோம் என தமிழ் தேசிய கூட்மைப்பினரை அறிவிக்க கோருவோம்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் அரசியல் கைதிகள் என அரசாங்கத்துக்கு எடுத்து சொல்வோம். சட்ட ஒழுங்கு அமைச்சருக்கும் தெரிவிப்போம்.

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை சந்தித்து நாங்கள் உங்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். நீங்கள் உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என கோருவோம்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிங்கள மக்களுக்கு தெளிவில்லை. நாம் அவர்களுக்கு அதனை தெளிவுபடுத்தவேண்டும். அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் விசேட சட்டத்தின் மூலம் குற்றவாளியாக காணப்பட்டவர்கள் என்பதனை எடுத்து கூற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

No comments