பிரான்சு ஆர்ஜொந்தேயில் திலீபன் நினைவுத்தூபி முன்பாக அடையாள உண்ணாநோன்பு!

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று 26.09.2017 புதன்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜொந்தே நகரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் இன்று 31வது ஆண்டு நினைவேந்தலுடன் கேணல் சங்கர் அவர்களின் 17 வது நினைவேந்தல் நிகழ்வும் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. தொடர்ந்து காலை 10:00மணி முதல் மாலை 17:00மணி வரை அடையாள உண்ணாவிரதமும் இடம்பெறுகின்றது.



இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆர்ஜொந்தே தமிழ்ச் சங்கத் தலைவர் விமலராஜா ஏற்றிவைக்க, தூபிக்கான நினைவுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனை துணைப்பொறுப்பாளர் திரு. பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். 

இரண்டு மாவீரருக்குமான ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் துணைவியார் ஏற்றிவைக்க, மலர்மாலையை ஆர்ஜொந்தே தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி ராணி அவர்கள் அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. உணர்வாளர்கள் பலரும் இந்த அடையாள உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.



எதிர்வரும் (30.09.2017) ஞாயிற்றுக்கிழமை பகல் 14.00 மணிக்கு தியாகதீபம் திலீபனின் நிiனைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கேணல் சங்கர் அவர்களின் 17 வது நினைவேந்தல் நிகழ்வும் லெப்.கேணல் திலீபனின் 31 வது நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)







No comments