வாடிகளை அகற்றுமாறு நீதிமன்று உத்தரவு


வடமராட்சி கிழக்கில் அனுமதியின்றி வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்ட எட்டு நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதியை எட்டு நிறுவனங்கள் பெற்றிருந்தன. அவைகள் பிரதேச செயலாளரின் அனுமதியின்றி அடாத்தாக அரச காணிகளில் வாடிகள் அமைத்து தொழிலில்  ஈடுபட்டன. அதற்கு உள்ளூர் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களையும் நடாத்தினார்கள்.

அந்நிலையில் குறித்த எட்டு நிறுவனங்களுக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளரால் கிளிநொச்சி  மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  குறித்த வழக்கு விசாரணைகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வந்தது. அந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது பிரதேச செயலாளரின் அனுமதியின்றி வாடி அமைத்த எட்டு நிறுவனங்களும் அங்கிருந்து உடனடியாக  வெளியேற வேண்டும் என நீதிமன்று கட்டளையிட்டது.

குறித்த நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் எட்டு நிறுவனங்களின் 32 வாடிகள் அகற்றப்படவுள்ளதுடன் அவற்றில் பணி புரிந்த 850 வெளிமாவட்ட மீனவர்களும் வெளியேறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

No comments