எல்லைகளை மீளாய்வுசெய்தால் ஜனவரியில் தேர்தல்


மீளாய்வு செய்யப்படும் எல்லை மீள்நிர்ணய அறிக்கை இரண்டு மாதத்துக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படுமாயின் திட்டமிட்டபடி ஜனவரி முதல் வாரத்தில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்த முடியும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

"பாராளுமன்ற சபாநாயகரிடத்திலேயே தற்பொழுது பந்து உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணய அறி க்கை 139 வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதனால் மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் காலதாமதப் படுத்தப்படலாம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக இடம்பெறக் கூடிய செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர், எல்லை மீள்நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கு பிரதமர் தலைமையில் ஐவரைக் கொண்ட குழுவை சபாநாயகர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் குழுவுக்கு எல்லை மீள்நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான அதிகாரமே உள்ளது. இது தவிர வேறெந்த திருத்தங்களையும் அவர்களால் மேற்கொள்ள முடியாது என்றார்.

மீளாய்வுக் குழுவின் அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதும், அவர் அதனை வர்த்தமானியில் வெளியிடுவார்.

"மீளாய்வு செய்யப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டிய தேவை இல்லை. இது தற்பொழுது முடிந்துவிட்டது. ஜனாதிபதி அந்த அறிtக்கையை வர்த்தமானியில் வெ ளியிட்டால் தேர்தல்களை ஜனவரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ள முடியும்" என்றார்.

அதேநேரம், மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். பிரதமர் தலைமையில் மீளாய்வுக் குழுவை விரைவில் அமைப்பேன் என்றும் பிரதமர் தவிர அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனையவர்கள் அரசியல்வாதிகளாக இருக்காமாட்டார்கள் என்பதுடன், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

No comments