பதவிக்கு வரும்வரை எல்லோரும் நல்லவர்கள்தான்


"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்பதுபோல் அரச சேவைக்குள் நல்ல மனிதர்களாக வருகிறவர்கள் பின்னாளில் மாறி விடுகிறார்கள். என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண சபைக் கேட்போர் கூடுத்தில் இன்று நடைபெற்றபோது நியமனத்தை வழங்கிவைத்து உரையாற்றுகையிலையே அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாண சபை என்பது முதலாவது சபை.  இந்தச் சபை தொடர்பில் விமர்சனங்கள் குறைகள் சொல்வதைப் நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். ஆயினும் இதனுடைய காலத்திற்கு நாட்கள் எண்ணப்படுகிறது. அவ்வாறானதொரு நிலையில் தான் நீங்களும் அந்த சேவையினுடைய உறுப்பினர்களாக இணைந்து கொள்கிறீர்கள். மாகாண சபையில் 38 உறுப்பினர்கள் தான் இருக்கிறோம். ஆனால் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் இருக்கின்றார்கள். எங்களுடைய அரசியல், தொழிற்பாட்டு, கொள்கை, அபிவிருத்தி ரீதியான பல விடயங்களை நாங்கள் சபை சார்ந்து, அமைச்சர் சபை சார்ந்து  முடிவெடுத்தாலும் அவற்றை நிரப்புகின்ற பூர்த்தி செய்கின்ற நிறைவேற்றுகின்ற பணிகள் பிரதம செயலாளரிடமிந்து செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் கைகளில் தான் தங்கியிரக்கின்றது. ஆகவே அரசியல் ரீதியான எங்கள் பெருமையும், சிறுமையும் எழுச்சியும், வீழ்ச்சியும் அதிகாரிகளைச் சார்ந்தது.

நான் ஒரு அரசாங்க அதிகாரியாக இருந்தவன். அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வந்தனவன். ஆகவே ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். அதாவது நல்லவர்களாகவே அரச சேவைக்கு வருவார்கள் ஆனால் பின்னர் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே என்ற பாட்டு போலவே இங்கே வந்தவுடன் மாற்றம் வருகின்றது. போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் போன பின்னர் வேலைகளைச் செய்வதில் தவறுகின்றனர்.

இது தான் இன்றைக்கு பொதுச் சேவையில் இருக்கிற பலவீனம். இந்த மாகாணம், மண் எங்களுடையது. சேவைக்காக அர்ப்பணிப்பாக செய்ய வேண்டுமென நீங்கள் எப்போது உணருகிறீர்களோ அப்பொது தான் உண்மையான சேவை நடக்கும். ஆனால் இதை குறையாக சொல்லவில்லை. இது தான் நடக்கிறதென்று தெரியும். அதிலிருந்து விடுபட்டால் தான் சிறந்த சேவையை வழங்க முடியும். இல்லாவிட்டால் இதனையெல்லாம் வைத்து ஒட்டுமொத்தமாக மாகாண சபையை தான் குறை குற்றம் சொல்வார்கள். ஏற்கனவே கூறியது போன்று எங்கள் நாட்கள் எண்ணப்படுகிறது.

ஆனாலும் இங்கே தான் நாம் இருப்போம். மாகாண சபையை பின்தொடர்ந்து அதனை கண்காணிக்கின்ற உரித்து உரிமை கடமை பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இந்த மாகாணம் மாகாண சபை ஏற்கனவே எங்களுடைய உயர் அதிகாரிகள் குறிப்பாக இந்த நாட்டிலே கூடுதலான அங்கீகாரத்தை ஏற்புடைமையை ஒப்பீட்டு ரீதியாக பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையான உயர் அதிகாரிகளைக் கொண்ட நிர்வாக கட்டமைப்பு இருக்கிறது. ஆகவே உங்கள் பங்களிப்பம் திடமானதாக அர்ப்பணிப்புள்ளதாக இருக்க வேண்டும். எங்கள் மண் என்பதில் கடமையை முழு மனதுடன் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

No comments