வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய 1400 சிங்கள மீனவர்கள்


யாழ்.வடமராட்சி கிழக்கில் 1400 வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாக மருதங்கேணி பிரதேச செயலர் கூறுகிறார். இவ்வாறான நிலை மிகவும் ஆபத்தானது என கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமராட்சி கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்படவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக சிவாஜிலிங்கம் மேலும் தகவல் தருகையில், வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியிருக்கும் தென்பகுதி மீனவர்களை அல்லது வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு மக்கள் கேட்டிருந்தனர்.

மக்களுடைய கோரிக்கை அரசாங்கத்தினால் புரிந்து கொள்ளப்படவில்லை. தற்போது குறித்த மீனவர்களை வெளியேற்றுவதற்காக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரதேச செயலர் வடமராட்சி கிழக்கில் 1400 தென்பகுதி மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாகவும், அவர்கள் அரச காணிகளில் தங்கியிருப்பதாகவும் கூறியிருக்கின்றார். தற்போது தற்காலிகமாக தங்கியிருக்கும் அவர்கள் வெகு விரைவில் நிரந்தரமாக தங்குவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. இதனால் வடமராட்சி கிழக்கில் 10பேருக்கு ஒருவர் வெளிமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்னும் அளவுக்கு நிலமை மாறவுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த சம்பவங்களை நாங்கள் நேரடியாக பார்த்திருக்கி றோம். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிது சிறிதாக வந்து தற்காலிகமாக தங்குவதாக காட்டிக் கொண்ட மீனவர்களே பின்னர் அங்கு நிரந்தரமாக தங்கியிருப்பது மட்டும ல்லாமல் தமக்கு நிரந்தர காணிகளையும், வீட்டு திட்டங்களையும் வழங்குங்கள். என இப்போது கேட்கிறார்கள். அப்படி யாழ்ப்பாணத்திலும் குறிப்பாக வடமராட்சி கிழக்கிலும் தென்பகுதி மீனவர்கள் கேட்கும் நிலை வரவுள்ளது. இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.

No comments