காசு கொடுத்தாலே காணி விடுவிப்பு!இராணுவம் விடாப்பிடி!

படைமுகாம்களிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென்ற கோரிக்கையிலிருந்து இறங்கிவர பாதுகாப்பு தரப்பு தயாராக இல்லாதிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மீள் குடியேற்ற அமைச்சின் நிதி கிடைத்தவுடன் மேலும் 522 ஏக்கர் நிலப்பரப்பு வடக்கில் விடுவிக்கப்படுமென இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கம் கிடைக்கப்பெற்ற பின்னர் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்பட்ட காணிகளை விடுவிப்பதில் சிக்கல் இருக்காது எனவும் இராணுவம் அறிவித்துள்ளது.

இது குறித்த இராணுவப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில் வடக்கில் 522 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிக்க தீர்மானித்திருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இன்னும் அந்த காலம் தீர்மானிக்கப்படவில்லை. விடுவிக்கப்படவுள்ள காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் கட்டமைப்புக்கான இடமாற்றம் செய்வதற்கான நிதியை மீள்குடியேற்ற துறை அமைச்சு வழங்கவேண்டும். குறித்த நிதியளிப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட பின்னர் அந்த காணிகள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ் மக்களது மீள்குடியேற்றத்திற்கு சர்வதேச சமூகத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதியை படைத்தரப்பிற்கு ஒதுக்கி வழங்குவதாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments