ஊடகவியலாளர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க அனுமதி



 உயிர்நீர்த்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவுத்தூபி அமைப்பதற்கான இடத்தை வழங்குவதற்கான அனுமதியை, மட்டக்களப்பு மாநகரசபை வழங்கியுள்ளது.

 உயிர்நீர்த்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றை, காந்தி பூங்காவில் அமைப்பதற்கு இடமொன்றை ஒதுக்கித்தருமாறு, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவனிடம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வின்போது, தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இந்தக் கோரிக்கையை, எழுத்துமூலமாக வழங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் மூன்றாவது அமர்வின் போது, மாநகர மேயரால் இந்தக் கோரிக்கை தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை, சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான இடத்தை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயிர்நீத்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி, தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்திவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், அதன் தொடர்ச்சியாக உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவாக, நினைவுத்தூபி அமைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments