மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,தமிழின உணர்வாளர் டாக்டர் தமிழ்நேசன்,தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் எஸ்.நிலாந்தன் உட்பட பெருமளமான பொதுமக்கள்,மதகுருமார்கள்,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.




 மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வடகிழக்கில் உயிர்நீர்த்த உறவுகளுக்காக இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயிர்நீர்த்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள்,அருட்தந்தை நிக்ஸன் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையினை வலியுறுத்தும் வகையிலான உரைகளும் நடைபெற்றன.

ஏனைய நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு அந்த நாடுகள் நீதியை வழங்கியுள்ள நிலையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழின இனப்படுகொலைக்கு இதுவரையில் எந்தவித விசாரணையோ அல்லது கவலையோ தெரிவிக்கப்படவில்லையெனவும இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முடிந்த முடிவாகவே இருக்கவேண்டும் என்பதே தவிர அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமையை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டது.





No comments