20 ஆவது திருத்தச்சட்டம் நாட்டைப் பிளவுபடுத்தும் – மகா சங்கம் எச்சரிக்கை


நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தச்சட்டம், நிறைவேற்றப்பட்டால் நாடு பிளவுபடும் என்று சிறிலங்காவின் பௌத்த பிக்குகளைக் கொண்ட தேசிய விஸ்வத் சங்க சபா எச்சரித்துள்ளது. நேற்று முன்தினம் கொழும்பில் நடந்த மகாசங்கத்தின் தேசிய மாநாட்டில், உரையாற்றிய மகாசங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் இந்துரகரே தம்மரத்ன, வண. மெடகம தம்மானந்த தேரர், வண. மெடகொட அபேதிஸ்ஸ தேரர், வண. கோன்கஸ்தெனியெ ஆனந்த தேரர், அகுரதியே நந்த தேரர், உள்ளிட்ட பலரும், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இங்கு உரையாற்றி்ய பேராசிரியர் இந்துரகரே தம்மரத்ன தேரர், சிறிலங்காவில் உள்ள சில பிரிவினைவாதிகள் நாட்டைப் பிளவுபடுத்தலாம் என்று நம்புகிறார்கள். அவர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். என்று கூறினார். 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது ஆபத்தானது என்றும், பௌத்த பிக்குகள் சுட்டிக்காட்டினர். நாட்டைப் பிளவுபடுத்தக் கூடிய இந்த திருத்தச்சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, சிறிலங்கா அதிபரே, பிரதமரோ ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

No comments