இரவிரவாக இரணைதீவில் போராட்டம்!



ஆயுதங்களுக்கு மத்தியில் நிராயுதபாணிகளாக தங்களின் சொந்த மண்ணுக்குள் நுழைந்துள்ள இரணைதீவு மக்களின் இன்றைய எழுச்சிப்போராட்டம் இரவிரவாக தொடர்கின்றது.போராட்டத்திலீடுபட்டுள்ளவர்கள் அப்பகுதியிலுள்ள தேவாலயத்தில் தங்கியுள்ள நிலையினில் உணவு பொருட்கள் கடல் வழி எடுத்து செல்லப்படுகின்றது.மறுபுறம் கடற்படை காவல் கடமையிலீடுபட்டுள்ளது.
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பு போராட்டம் ஒரு வருடத்தை இன்று பூர்த்தி செய்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பேரணி மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த இரணைமாதா நகரில் கண்டன பேரணியொன்றை இன்று நடத்தியிருந்ததுடன் திடீரென கடலில் இறங்கி கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரணைதீவு கிராமத்திற்கு செல்லப்போவதாக எச்சரித்து இறுதியில் சுமார் 250 பேர் வரையில் தரையிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரையேனும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
1992ம் ஆண்டு முதல் இரணைதீவு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இரணைமாதா குடியிருப்பு கிராமத்தில் வாழவைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

 

No comments