காவல்துறையினர் விரட்டப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு!! முல்லைத்தீவில் சம்பவம்!

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடைக்கட்டு குளத்தில் காவல்துறையினரால் துரத்திச்சென்றபோது குடும்பத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை 2 மணியளவில் இடைக்கட்டு குளத்தின் அலைகரை பக்கம் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்கும் முகமாக சுற்று நடவடிக்கையை மேற்கொண்ட சந்தர்பத்தில் குளத்து அலைகரையில் நின்ற 3 நபர்களை கண்ட காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்றபோது மூவரும் குளத்து நீரினுள் குதித்துள்ளனர்.

இந்நிலையில் நீரினுள் குதித்த மூவரில் ஒருவர் நீந்தி செல்லும் போது நீரில் மூழ்கியுள்ளார். மற்றுமொருவர் நீந்தமுடியாத நிலையில் காவல்துறையினரால் மீண்டும் வந்து சரணடைந்துள்ளார்.

இரண்டு மணிக்கு நீரில் மூழ்கியவரை மாலை 6 மணியளவில் அயலவர்கள் தேடி சடவமாக மீட்டபோதும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகைதராததால் அங்கு குழப்பநிலை தோன்றியது. இதன்போது அங்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கி இரவு 8 மணியளவில் குறித்த பகுதிக்கு காவல்துறையினர் வருகைதந்து சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் குரவில், உடையார்கட்டு தெற்கு பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய மகேஸ்வரன் ராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments