உதயசூரியன் கூட்டணியில் இருந்து வெளியேறியது ஜனநாயக தமிழரசு கட்சி!


வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப் நடந்து கொண்டது அரசியல் அநாகரிகம் என்றும் அதனால், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாகவும், அந்தக் கூட்டமைப்பின் அக்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கையில்லை. ஜனநாயகத் தன்மை இல்லை சர்வாதிகரம் காணப்படுகின்றது. எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அரசாங்கத்துடன் சரணகதி அரசியல் நடத்துகிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனும் அடுக்கடுக்கான பல்வேறு விதமான குற்றச்சாட்டுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிட்டோம்.

உள்ளுராட்சி மன்றங்களில் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை எனும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு மாறாக வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப் நடந்து கொண்டது அரசியல் அநாகரிகம். கொள்கையில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைக்கிறது என குற்றஞ்சாட்டி விட்டு அதே வேலையை எம்மால் செய்ய முடியுமா? பதவி பெறுவது தான் முக்கியம் என்றால் எதற்காக இந்த கூட்டில் நாம் தொடர வேண்டும். கொள்கையில்லாத தமிழ் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டில் நாம் தொடர விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். வவுனியாவில் பொது எதிரியாகிய தேசிய கட்சிகளுடன் கை கோர்த்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் விடுதலைப் போக்கை கொள்கையற்ற பதவி ஒரு போதும் சமப்படுத்தப் போவது இல்லை. பதவி பெறுவது விடுதலை அரசியலுக்கு அறமும் இல்லை. இன அழிப்பை ஏற்படுத்திய தேசிய கட்சிகளுடனும் காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுத்த தேச விரோத ஈ.பி.டி.பி- கருணா குழு போன்றவற்றுடன் வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாக ஆட்சி அமைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அநாகரிக பிற்போக்குதனத்தை நாமும் பின்பற்றுவது அதை விட அசிங்கமாகும். ஆகவே தமிழ்த் தேசியத்துக்கு மாறானவர்களுடன் இணைந்து பதவி இலாபம் தேடியதால் இந்த கொள்ளையற்ற கூட்டில் தொடர முடியாது என நாம் தீர்மானித்து அக் கூட்டணியில் இருந்து இன்று முதல் உத்தியோகபூர்வமாக வெளியேறுகின்றோம்.

அரசியலில் எந்த சந்தர்ப்பத்திலும் ஆதாய சூதாடியாக நாம் இருக்க விரும்பவில்லை என்பதில் திடமான கொள்கையில் பயணிப்பவர்கள் நாம். ஆகவே இவ்வாறான பதவி, சுகபோகங்களுடன் கூட்டிணைந்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம். காலம் இவர்களுக்கு தகுந்த பதில் வழங்கும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது

No comments