ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை மீதான விவாதம் இன்று


ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதமும் வாக்களிப்பும் இன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, இன்றைய நாடாளுமன்றம் முற்பகல் 9.30 க்கு கூடவுள்ள நிலையில் இரவு 9.30க்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெப்பத்துடன் கடந்த 21ஆம் திகதி, ஒன்றிணைந்த எதிர்கட்சி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்தது.

அதில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 51 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதுடன், சுதந்திர கட்சியின் ராஜாங்க அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க, பிரதியமைச்சரான நிஷாந்த ஹெட்டியாராச்சி, சுசந்த புஞ்சி நிலமே ஆகியோரும் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்துள்ளது.

பிணைமுறி மோசடி நோக்கில் மத்திய வங்கியின் அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தமை, சிங்கப்பூர் பிரஜை ஒருவரை அதன் ஆளுநராக நியமித்தமை, முறி மோசடி விவகாரத்தில் நேரடியாக தொடர்புப்பட்டமை மற்றும் அதனுடன் தொடர்புபட்டவர்களை பாதுகாப்பதற்கு முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதில் உள்ளடங்குகின்றன.

தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கருஜயசூரியவை தவிர்த்து ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் 105 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் 96 உறுப்பினர்களில் 54 பேர் ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரநிதித்துவப்படுத்துகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்கள் உள்ளநிலையில், ஜே.வி.பி சார்பில் 6 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 6 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 2 பேரும், ஈ.பி.டி.பி சார்பில் ஒருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்க அமைச்சர்களே அவ நம்பிக்கை பிரேரணையை கொண்டு வந்ததில்லை என பொருளாதார ராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.

இலங்கையில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஒரு அணி பிரதமருக்கு எதிராக அவ நம்பிக்கை பிரேரணையை கொண்டு வந்துள்ளது.

இதற்கு அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரே கைச்சாத்திட்டுள்ளமையானது கேளிக்கையான விடயம்.

உலகில் எந்த நாட்டின் வரலாற்றிலும் இவ்வாறான நிலைமை பதிவானதில்லை.

தம்மீது நம்பிக்கையில்லை என்றால் அவர் விலகி செல்ல வேண்டுமே தவிர தமக்கு எதிராகவே அவ நம்பிக்கை பிரேரணையை கொண்டு வருவது வேடிக்கையானது என ஹர்ச டி சில்வா தெரிவித்தார்

No comments