ஈ.பி,ஆர்.எல்.எவ் தலைவர்கள் ரணிலைச் சந்திக்கிறார்கள்

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சந்திக்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக  ஈ.பி.ஆர்.எல்.எப். அரசுக்கு நெருக்கடிகள் எழுந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பில் இன்று காலைஅலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தச் சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அரசாங்கத்திற்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கும் இடையில் நடைபெறுகின்ற இந்த முதலாவது சந்திப்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து, ஈ.பி.ஆர்.எல்.எவ். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது.

தமிழரசுக் கட்சிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கும் இடையில் நிலவிய முரண்பாடான நிலைப்பாடுகளையடுத்து, பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற அமர்வுகளில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் தொடர்ச்சியாக மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments