ரவிராஜ் விசாரணை மீண்டும் ஆரம்பம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடராஜா ரவிராஜ் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வெளியேறியபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், அவருடன் இருந்த மெய்க்காப்பாளரும்; உயிரிழந்தார்.
கொலை தொடர்பில் கடற்படைச் சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 2016ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு ஜூரி சபை அவர்களை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது.
தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னைய விடுதலைத் தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிதாக விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரனராஜா ஆகியோர் அடங்கிய அமர்வே தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கில் முக்கியமான அரசு தரப்பு சாட்சியாக சம்பத் மனம்பேரி என்பவர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் காவல்துறையை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவிராஜ் கொலை தொடர்பில் தாம் பைக் ஓட்டுநராகச் செயல்பட்டதாக அவர் வாக்குமூலம் வழங்கியிருந்ததுடன், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலருடனான தொடர்புகள் குறித்தும் தகவல்களை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியின் வாக்குமூலத்தை மதிப்பீடு செய்யும் போது, ஜூரி சபைக்கு உரிய சட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிரான விசாரணையைத் தொடர்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கருதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிதாக விசாரணைக்கு வரவுள்ளது.

Post a Comment