பிரபாகரன் டிலக்சனுக்கு குடைச்சல்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளது தேசிய மக்கள் சக்தி அரசு. யாழ்ப்பாண ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர் பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார விஜயம் செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு வெளிப்படுத்தியமை, ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் பணியாற்றுவதற்கான ஊடக அடையாள அட்டையை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அரச ஊடக நிறுவனத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
ஊடகவியலாளர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செய்தி அறிக்கையிடலை மேற்கோள்வதற்கு உரிமையை கொண்டுள்ளபோதும் மாற்றம் என கூறி மார்தட்டி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கடந்த அரசாங்க காலங்களை விட மிக மோசமான முறையில் குறித்த ஊடகவியலாளர் பணி செய்யும் ஊடக நிறுவனத்திற்கு முறையிட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதன் மூலம் ஊடக சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

Post a Comment