பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: ஈபிள் கோபுரம் மூடப்பட்டது
பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம், பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இன்று, திங்கட்கிழமை, மூடப்பட்டது.
கோபுரத்தைப் பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள், அதன் திறப்பு செயல்பாட்டுக் காரணங்களால் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கும் அறிவிப்பைக் கண்டனர்.
இதனிடையே, இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மீக இயக்கமான BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 ஆண்கள் ஈபிள் கோபுரத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் வருகையின்போது, பெண் ஊழியர்களுடனான தொடர்புகள் மட்டுப்படுத்தப்படும் வகையில் தொழில்முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் ஊழியர்கள் தங்கள் பாலினத்தின் காரணமாக ஓரங்கட்டப்படவும், மாற்றப்படவும், புறக்கணிக்கப்படவும் வழிவகுக்கும் அறிவுறுத்தல்களை கண்டித்து அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் SETE நிறுவனம், அந்தக் குழு சிறப்பு வருகைக்கான கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும், அதன் ஒரு பகுதியாக பெண்களுடனான தொடர்புகள் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பாரிஸ் நகர சோசலிச மேயர் இம்மானுவேல் கிரெகோயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவம் பிரான்சின் வரலாற்றுச் சின்னங்களிலோ அல்லது பாரிஸ் நகரின் வேறு எந்த இடத்திலோ சமரசம் செய்யப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment