செம்மணி அகழ்வு பணிகள் நாளையுடன் நிறைவு - இன்றும் 10 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன


செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளைய நாள் புதன்கிழமை இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது.


செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் சான்று பொருளாக தாயத்து, நாணயம் , சிறு இரும்புத்துண்டும் மீட்கப்பட்டுள்ளன.

No comments