கிளிநொச்சியில் சட்டவிரோத விவசாய பண்ணை - ஊடக அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்கள்
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், பகுதியில், 1919-ஆம் ஆண்டில் வனக் காப்பகமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட நிலத்திலையே, புலிகளின் பயிற்சி முகாம் அமைந்துள்ளது என பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
2025-ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் காடழித்தல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானம் தொடர்பான சம்பவங்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அந்த இடத்தில் நடந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்றாழை மற்றும் காய்கறி விவசாய நடவடிக்கை ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலம் சீர்செய்யப்பட்டு, பின்னர் அது 20 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன், அந்த இடத்தில் ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் அந்த நபரை நிலத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது, ஆனால் அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இந்த விவகாரம், விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் செயல்படுவது தொடர்பானது அல்ல என்றும், மாறாக அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம், சாகுபடி மற்றும் மணல் அகழ்வு ஆகியவை தொடர்பானது என மேலும் தெரிவித்தார்.

Post a Comment