வலி. வடக்கில் 2013ஆம் ஆண்டிற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகள் சட்டரீதியாக விடுவிக்கப்படவில்லை


வலி. வடக்கில் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட பெருமளவான காணிகள் இன்னமும் உரிமையாளர்களிடம் ஆவண ரீதியாக கையளிக்கப்படவில்லை எனவும் , அதனை முழுமையாக கையளிக்க வேண்டும் ஆயின் காணி சுவீகரிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள பெறப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்

வலி வடக்கில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு , அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவிக்கையில், 

வலி.வடக்கு பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் காணியை சுவீகரிப்பதாக 2013ஆம் ஆண்டு கால பகுதியில் வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்டது.  அதன் பின்னரான கால பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு , மக்கள் தமது காணிகளில் குடியேறியுள்ளனர். 

இது முற்று முழுதான சட்டரீதியான காணி விடுவிப்பு இல்லை. உங்கள் காணிகளில் வந்து குடியேறுங்கள் என குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த காணிகள் இன்றும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சுவீகரிக்கப்பட்ட காணியாகவே உள்ளது. 

அதனால் தான் அந்த வர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரி வருகிறோம். 

வலி. வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கு தொடர்ந்த பலரின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் , வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதற்கு காரணம் , விடுவிக்கப்பட்ட காணி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இன்னமும் சுவீகரிக்கப்பட்ட காணியாக காணப்படுவதால் , வர்த்தமானி அறிவித்தலை மீள பெற்றால் மாத்திரமே , அந்த காணி சட்டரீதியாக முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்ட காணியாகும் அதனாலயே அந்த வழக்குகள் இன்றும் உச்ச நீதிமன்றில் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார.


No comments