பொலிசாரின் அச்சுறுத்தல்களை மீறி வல்வெட்டித்துறையில் போராட்டம்


பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி வல்வெட்டித்துறையில்  இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கொண்ட பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சங்கீர்த்தனன் எனும் சொல்லிசை பாடகர் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில்,குறித்த பாடகரை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி வல்வெட்டித்துறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, சங்கீர்த்தனனின் விடுதலையையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

குறித்த போராட்டம் தொடர்பிலான அறிவித்தல்கள் வெளியான நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்ட ஏற்பாட்டளர்கள் என சிலரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் , போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் , போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் , உங்களையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தி , அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்று விடுவித்து இருந்தனர். 

இந்நிலையில் பொலிசாரின் நெருக்கடிகள் அச்சுறுத்தல்களையும் மீறி , கலைஞனை விடுவிக்க வேண்டும் என போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 




No comments