‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்றைய தினம் புதன்கிழமை காலமானார்
அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.
அதுவரை ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.
‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தினார்.
அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.
இந்நிலையில் அவரது மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு, பாரதிராஜாவை ஆழமாகப் பாதித்திருந்ததாக நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்திருந்தன.
கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா இன்றைய தினம் அதிகாலையில் காலமானார்.
அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment