NDB வங்கியில் 13.2 பில்லியன் ரூபா உள்ளக மோசடி
தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த மோசடி தொடர்பான விபரங்களை தேசிய அபிவிருந்தி வங்கியானது மத்திய வங்கிக்குத் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தச் சம்பவத்தால் வாடிக்கையாளர்களின் எந்தவொரு கணக்குகளோ அல்லது வைப்புக்களோ பாதிக்கப்படவில்லை என வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
மோசடி குறித்து தேசிய அபிவிருந்தி வங்கி தெரிவித்துள்ளதாவது,
தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) அண்மையில் கண்டறியப்பட்ட உள்ளக மோசடி சம்பவத்தினால் சுமார் 13.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை, வங்கியின் செயற்பாடுகள் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படுகிறது.
கூட்டாண்மை வெளிப்படுத்தலின் (Corporate Disclosure) படி, இந்த மோசடியானது வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல் வசதிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் சட்ட அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரிவானது தற்போது விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அணுகல் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோசடிக்கான காரணங்களைக் கண்டறியவும், உள்ளகக் கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்யவும் ஒரு சுயாதீன தடயவியல் கணக்காய்வாளரை (Forensic Auditor) நியமிக்க பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில், இந்த மோசடிக்கான முழுமையான ஒதுக்கீடுகளைச் செய்த பின்னர், வங்கிக்கு சுமார் 4.0 பில்லியன் ரூபா வரிக்குப் பிந்திய நட்டம் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment