ஜா-எல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மூன்று வீடுகள்
ஜா-எல பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, துப்பாக்கிதாரிகள் குறித்த வீட்டின் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய, புனித ஆனா வீதி, இலக்கம் 05 இல் அமைந்துள்ள வீட்டை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பட்டுவத்தே சாமர என்ற மனோஜ் சுரங்க லியனகே என்பவரின் மனைவியான சதுரிகா வீரசூரிய வசித்து வந்த வீட்டின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த வீட்டின் மீதும் ஏனைய இரண்டு வீடுகளின் மீதும் சுமார் 23 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பட்டுவத்தே சாமரவின் மனைவி தற்போது டுபாயில் வசித்து வருவதுடன், இந்த வீடு கடந்த 2 மாதங்களாக முதியோர் இல்லம் நடத்துவதற்காக மாதம் 125,000 ரூபா வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் அந்த வீட்டில் 9 முதியவர்களும் 4 தாதியர்களும் இருந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வீட்டின் மீது கடந்த 2025.12.15 மற்றும் 2025.12.24 ஆகிய திகதிகளிலும் இதேபோன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment