யாழ் . போதனா இரத்த வங்கி ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும். இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தான நிலையாகும், இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.
இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி சேகரிக்கப்பட்டாலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் குருதியின் அளவு அதிகரித்து செல்கின்றது, இரத்த வங்கியில் நேரடியாக வந்து இரத்தம் கொடுக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்புக்களை விடுத்தும் வருகின்ற கொடையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது.
அத்துடன் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் தினமும் குருதியை பெற்றே நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குகின்றோம். தற்போது அவர்களிடமும் குருதியின் இருப்பு குறைவடைந்துள்ளதினால் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் குருதியை பெற முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். ஆகவே சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள், திணைக்களங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் தங்கள் தங்கள் இடங்களில் இரத்த தான முகாம்களை ஒழுங்கு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்கள் இடத்திற்கு வருகை தந்து குருதி சேகரிக்கும் பணியை நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
அத்துடன் தனி நபர்கள் எமது இரத்த வங்கிக்கு நேரடியாக காலை 8.00 மணியிலிருந்து பி.ப 7.00 மணிவரை சமூகம் கொடுத்து இரத்த தானம் செய்வதன் மூலம் குருதி தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யலாம்.
ஆகவே இவ் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இளைஞர், யுவதிகள் இரத்த தானம் செய்வதற்கு முன்வந்து எமது உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: 0212223063, 0772105375 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment