கிவுல் ஓயா திட்டத்தை ஒருபோதும் ஏற்கோம் - ரவிகரன் விடாப்பிடி
மகாவலி அதிகாரசபையின் செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், ரவிகரன் கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படப்போகும் பேராபத்துகளைச் சுட்டிக்காட்டினார்.
மகாவலி அதிகாரசபை என்பது தமிழர்களின் பூர்வீகக் காணிகளைப்பறித்து பெரும்பான்மை யினத்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு கட்டமைப்பாகவே செயற்படுவதாக சாடினார்.
இந்தத் திட்டத்தினால் வவுனியா வடக்கில் உள்ள காஞ்சூரமோட்டை, வெடிவைத்தகல்லு உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் 910 ஏக்கர் பூர்வீக வயல் நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே குடியேற்றப்பட்ட மற்றும் குடியேற்றப்படவுள்ள 6000 பெரும்பான்மையினக் குடும்பங்களே பயனடையவுள்ளனர்.
அடர்வனங்கள் அழிக்கப்படுவதால் மழைவீழ்ச்சி குறையும் என்றும், வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள் அழியும் என்றும் ரவிகரன் எச்சரித்தார்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் 30 பெரும்பான்மையினத்தவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டதில் முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் தங்கையும் அடங்கியுள்ளதாக பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில், திட்டத்தின் பாதகங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் ஆராய்ந்து, தீர்மானங்களை முறையாகச் சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் லால் காந்த கேட்டுக்கொண்டார்.
வடக்கில் மகாவலி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இந்த மாதமே விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Post a Comment