யாழ்.போதனாவில் "நாள் சத்திர சிகிச்சை நிலையம்" ஆரம்பிப்பு


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  "யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்" நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும்.

இதனைத் தமிழில் "நாள் சத்திரசிகிச்சை" அல்லது "அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை" என்று அழைப்பார்கள்.

இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது.

மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும்.

பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது.

மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன

இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 





No comments