பொலிஸ் தடுப்பு காவலில் உள்ள பெண் வழங்கிய தகவல் - துப்பாக்கி , போதைப்பொருள் என்பன மீட்பு
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெண் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான போலி வாகன இலக்கத்தகடுகளை கல்கிஸ்ஸை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கல்கிஸ்ஸை பிரிவெனா வீதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோத பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது
இதற்கமைய, நேற்று குறித்த வீட்டைச் சோதனையிட்டபோது, 10 கிராம் 260 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 8 இலட்சம் ரூபா பணத்தொகை, ஒரு துப்பாக்கி, தோட்டா, மோட்டார் சைக்கிள்களுக்கான 08 போலி இலக்கத்தகடுகள், முச்சக்கர வண்டிகளுக்கான 04 தகடுகள், கார்களுக்கான 18 போலி இலக்கத்தகடுகள், 02 தங்கச் சங்கிலிகள், ஒரு தங்கக் காப்பு மற்றும் ஒரு மோதிரம் மற்றும் ஒரு இலத்திரனியல் தராசு என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒருவரிடமிருந்தே இந்த ஆயுதங்கள் குறித்த பெண்ணுக்குக் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த ஆயுதங்கள் அனைத்தும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டவையா அல்லது திருடப்பட்டவையா என்பது தொடர்பில் கல்கிஸ்ஸைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment