யாழில். உணவகத்தை தங்குமிடமாக பாவித்தமை உள்ளிட்ட குற்றம் - 25 ஆயிரம் தண்டம்
யாழில். உணவகத்தை வதிவிடமாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட பரிசோதனையில்,
உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, உணவகத்தில் கடமை புரியும் ஊழியர்கள் தனிநபர் சுகாதாரம் பேணாமை, இலையான் பெருக இடமளித்தமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, உணவகத்தினை வதிவிடமாக பயன்படுத்தியமை ஆகிய குற்றங்கள் கண்டறியப்பட்டு , அவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, உணவாக உரிமையாளர் தன மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 25ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
Post a Comment