மலையகத்தினில் ஆதரவு!
ஏம்.ஏ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பிற்கு தமிழர் தாயகத்தில் குறிப்பிட்டு சொல்லத்தக்க ஆதரவற்ற நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இந்நிலையில் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் ஆகஸ்ட் 15ம் திகதி, வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “வடக்கு ,கிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை ஆதரிப்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும். எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டுமென மற்றொரு மலையக கட்சி தலைவரான ஜீவன் தொண்டமானும் தெரிவித்துள்ளார்.
“இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க மூட வேண்டும். “அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதேயே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.
Post a Comment