உயிர்களை காவு வாங்கும் வல்லை பாலம் - தீர்வு என்ன ? வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் கேள்வி


வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. 

ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன. பலர் கடுமையான காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் வல்லைப் பாலம் மேலும் மேலும் ஆபத்தானதாக மாறிவரும் நிலையில், அதைச் சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதற்குப் பதில் வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சந்திரசேகரன், 

வல்லைப் பாலம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அதற்குரிய நிதி ஒதுக்கப்படும் என்றார். 

இதையடுத்து, வல்லைப் பாலத்தில் போதியளவு மின்விளக்குகள் இல்லை என்ற விடயத்தை தவிசாளருக்கு,  நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுட்டிக்காட்டினார். 

இதற்குப் பதில் வழங்கிய தவிசாளர், 'கடந்த காலங்களில் வல்லைப் பாலத்தில் போதியளவு மின் விளக்குகள் பூட்டப்பட்டன. எனினும், அவை காலப்போக்கில் திருடப்பட்டுவிட்டன. உடனடித் தேவை கருதி சில சோலர் விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார்.

No comments