கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள தாயும் பிள்ளைகளும்
முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக இன்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த கிணற்றின் அருகில் பெண்களின் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து அது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த உசாகரன் மாலினி (வயது38) அவரது பிள்ளைகளான உசாகரன் மிக்சா (வயது11) மற்றும் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment