முன்னணி -கூட்டணி ஒப்பந்தம்!

 


உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியினை பிடித்துக்கொள்ள ஏதுவாக தமிழ் தேசிய பேரவை என்றழைக்கப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று திங்கட்கிழமை (02) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டுள்ளனர். 

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் ஈபிடிபி முக்கியஸ்தரான முருகேசு சந்திரகுமார், நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம்  ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியுடன் ஆசனங்களை பங்கிடுவது தொடர்பிலான பேச்சுக்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்து தோல்வியடைந்த நிலையில் அடுத்த முயற்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.


No comments