தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை:என்ன பிரச்சினை!



"தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை.வடக்கு மாகாணத்தின் பெருமைமிகு வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக மருத்துவரும், தொழிற்சங்கவாதியுமான வைத்தியர் க.சுயந்தன் தெரிவி்த்துள்ளார். 

அவர் மேலும் இங்கு குறிப்பிடுகையில்..

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அமைக்கப்பெற்றிருக்கும், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை, வடக்கு மாகாண சபை  நிர்வாகக் கட்டமைப்பின் கீழ், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரினால் நிர்வகிக்கப்படுவது. 

முழு வடக்கு மாகாணத்திற்குமான அதிசிறப்பு புற்றுநோய் வைத்தியசாலை. சுமார் இரண்டு மில்லியன் வரையான இலங்கை மக்களுக்கான பிரதான புற்றுநோய் சிகிச்சை நிவாரணி. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, யாழ் போதானா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் மற்றும் அவரோடிணைந்த பொது அமைப்புக்கள் மற்றும் பிரமுகர்களின் முயற்சியினால், ஓர் பிரமாண்ட நடைபயணம் மூலம் அறிவூட்டப்பட்டு திரட்டப்பட்ட பணத்தில் கட்டப்பட்டது. 

அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் பிணி போக்கி அளப்பரிய சேவையாற்றியுள்ளது. 

வைத்தியசாலை அமையப்பெற்ற நோக்கம் உயர்வாயிருந்த போதிலும், அன்றிலிருந்து இன்றுவரை அதன் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளும், குழிபறிப்புகளும் ஏராளம். அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாய், வைத்தியசாலை உருவாக்கத்திற்கு காரணமாய் அமைந்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார், அவரின் நெடுநாள் நண்பரான தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் தேவநேசன் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரின் செயற்பாடுகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய எமக்கு நீண்டகால விமர்சனமும் சந்தேகமும் உண்டு. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சை அலகுகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்த வேளைகளில் எல்லாம், அவற்றின் இருப்பிற்காயும், வளர்ச்சிக்காயும் போராடிய நீண்ட வரலாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உண்டு. 

உதாரணமாக சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக, யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, சில மத்திய சுகாதார அமைச்சு அதிகாரிகளின் பின்னணியில், தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை அலகை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலிருந்து பிரித்து மத்திய அரசின் கீழ்வரும் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைக்க கடும் பிரயத்தனம் செய்த வேளை, அதற்கெதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு அச்சதி முயற்சியை முறியடிப்பதில் வெற்றி கண்டிருந்தோம். அதற்கு மாற்றாக, அதிவிசேட புற்றுநோய் மற்றும் உளநல சிகிச்சைப் பிரிவுகள் அடங்கிய தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை,யாழ் மருத்துவ பீடத்தோடு இணைந்த இரண்டாவது போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்திருந்தோம். இதன் மூலம் வடமாகாணத்திற்கு கிடைக்கக்கூடிய பாரிய நன்மைகளையும் சுட்டிக்காட்டியிருந்தோம். 

யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிகமாக அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் வழங்கவல்ல இன்னோர் வைத்தியசாலையின் உருவாக்கம், இதன் மூலம் பாரிய சிகிச்சைகளுக்கான நோயாளர்களின் காத்திருப்பு உள்ளிட்ட நெருக்கடிகள் குறைக்கப்படுதல், வடமாகாண சுகாதார சேவைகளிற்கான அரச ஆளணியை பன்மடங்காய் உயர்த்துதல், இதன் மூலம் வடமாகாணத்திலிருந்தான சுகாதாரத்துறை சார் புத்திஜுவிகளின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல், வடமாகாண சுகாதார ஆளணி உருவாக்கத்திற்கான பயிற்சி வாய்ப்புக்களை பன்மடங்கு உயர்த்துதல், அதன்மூலம் வடமாகாண சுகாதார சேவை வெற்றிடங்களை இங்குள்ளவர்கள் மூலமாகவே நிரப்புதல் போன்ற பல்வேறு ஆணித்தரமான காரணங்கள் எம்மால் முன்வைக்கப்பட்டிருந்தன.

 இக்கோரிக்கையானது , எமது தாய்ச்சங்கத்தினாலும் விதந்துரைக்கப்பட்டு, மத்திய சுகாதார அமைச்சு மற்றும் உயர் அரசியல் வட்டாரங்களுக்கும் அனுப்பப்பட்டதோடு, இது தொடர்பிலான இரண்டு கலந்துரையாடல்களும் எமது சங்கத்திற்கும் சுகாதார அமைச்சிற்குமிடையே இடம்பெற்றிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களும், எமது அனைத்து முயற்சிகளையும் பயனற்றதாக்கிவிட்டன. 

எது எவ்வாறாயினும், பொதுமக்களினதும், நோயாளர்களினதும், சுகாதார சேவைகளினதும் பெரு நன்மைக்காய் அம் முயற்சிகளை தொடர வேண்டிய தார்மீக கடைமைகளைக் கொண்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய எமக்கு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சை அலகுகளை மையமாக கொண்டு அண்மைக்காலமாய் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மிகுந்த கவலையையும் மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் உருவாக்கத்திற்கு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் பங்களித்திருந்த போதிலும், தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாய் அவர் யாழ் குடாநாட்டிலிருந்து வெளியேறி கொழும்பிலேயே வாழ்ந்து வருகிறார்.

 எனவே தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் உருவாக்கம் தொடக்கம் இன்றுவரை, அவ்வைத்தியசாலையின் முதுகெலும்பாய் அளப்பரிய பணியாற்றி வருபவர், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் கிருஷாந்தி அம்மையார் அவர்கள். சிறந்த கல்வியாளர், அபிவிருத்தியடைந்த நாடுகளின் மருத்துவ கல்வி நிறுவனங்கள், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்திய நிபுணர்களுடன் நெருக்கமான தொழில்முறை உறவைப் பேணுவதன் மூலம், புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அதிபிந்திய மருந்துகள்,  மருத்துவ முறைகள், தொழில்நுட்பங்கள் தொடர்பிலான தனது அறிவு மற்றும் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்பவர். இவ்வாறான அதிபிந்திய புற்றுநோய் சிகிச்சை முறைகள், நுட்பங்கள் ஓர் ஏழை நாடான இலங்கையிலுள்ள தனது நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக கடுமையாக போராடுபவர். 

இதற்கென உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள புற்றுநோயாளர் நலன்சார்ந்த உதவி நிறுவனங்களின் மூலமாக கணிசமான உதவிகள் ஏழைப் புற்றுநோயாளர்களை நேரடியாக சென்றடைவதை உறுதி செய்பவர். ஏனெனில், புற்றுநோய் சிகிச்சையென்பது மிக நீண்ட காலத்துக்கானது. அதி உச்ச தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது. இதில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பல இலட்சக்கணக்கில் பெறுமதியானவை. ஓர் புற்றுநோயாளி, முழுமையாக தனியார் வைத்தியசாலையொன்றில் தனக்கான சிகிச்சைகளை பெறுவாராயின் குறுகிய காலப்பகுதியினுள் பல கோடி ரூபாய்களை அதற்காக செலவிட வேண்டியிருக்கும். அவ்வாறில்லாமல், புற்றுநோயாளர்களுக்கு தேவையான அனைத்து வகையான தொழில்நுட்பங்களும், மருந்துகளும் சுகாதார அமைச்சினூடும் தனியார் உதவி நிறுவனங்களூடும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலே கிடைப்பதை உறுதி செய்வதற்காய் தொடர்ச்சியாய் போராடி வருபவர். நோயாளர்கள் மீதும் அவர்களுக்கான சிகிச்சைகள், அடிப்படை வசதிகள் மீதும் அதீத கரிசனை கொண்டவர். காலையில் அவர் தனது வாகனத்திலிருந்து இறங்கிய உடனேயே வைத்தியசாலை மிகப் பரபரப்பாகும். அனைத்து மட்ட பொறுப்பதிகாரிகளுக்கும் தொலைபேசி அழைப்புகளும் கண்டிப்பான உத்தரவுகளும் பறக்கும். புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுகளின் உட்புற, வெளிப்புற சுகாதாரம் உறுதி செய்யப்படும். குறிப்பாக மலசல கூடங்களின் சுத்தம், சுகாதாரம் கிரமமாகப் பேணப்படும். எங்காவது ஓரிடம் அழுக்காகவோ ஒழுங்கற்றோ இருக்குமிடத்து, காரணமானவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு உடனுக்குடன் சீர் செய்யப்படும். மருத்துவர்கள் முதல் துப்புரவு தொழிலாளிகள் வரை தமக்கான கடைமையிலிருப்பதையும், அதனை அவர்கள் சரிவரச் செய்வதையும் மிகக் கண்டிப்பாக உறுதி செய்பவர். அதில் எவ்வித சமரசங்களிற்கும் உடன்படாதவர்.

 வைத்தியசாலையிலிருந்து சுகாதார அமைச்சு வரை, அனைவருடனும், புற்றுநோயாளர்களின் நலனிற்காய், தேவைகளுக்காய் கடுமையான வாக்குவாதங்களில், போராட்டங்களில் ஈடுபடுபவர். இதன்மூலம் அனைவரது வசைபாடல்களையும், பகையையும் வலிந்து தேடிக்கொள்பவர். எனினும், அது தொடர்பில் சிறிதும் அலட்டிக் கொள்ளாதவர். சுருங்கக் கூறின் அவரோர் இரும்புப் பெண்மணி. தனிப்பட்ட திருமண வாழ்க்கையோ, குடும்ப வாழ்க்கையோ இன்றி, புற்றுநோயாளர்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். தனது கவலைகள்,வலிகளை பகிர்வதற்கோ, ஆறுதல் பெறுவதற்கோ கூட ஏனையவர்களுக்கு இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையப் பெறாதவர். சுகாதார சேவைகளிலேயே, அதி தொழில்நுட்பம் பாவிக்கப்படுகின்ற, மிகவும் செலவுமிக்க புற்றுநோய் சிகிச்சை அலகுகள் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் வருகின்ற பெரிய வைத்தியசாலைகளில் மாத்திரமே சாத்தியம் என்னும் மாயையை தகர்த்து, மாகாண நிர்வாகத்தின் கீழ்வருகின்ற ஓர் ஆதார வைத்தியசாலையிலேயே அதனை மிகத் திறம்பட,அதி உன்னத தரத்தில் வழங்கிக் கொண்டிருப்பவர். வெளிப்பார்வைக்கு ஏதோவோர் அரச சுகாதார சேவை போன்று தோன்றினாலும், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளரிற்கு கிடைக்கின்ற சேவைகளும் அவற்றின் தரமும், பெரும்பாலும் அம்மையாரின் தனிப்பட்ட உழைப்பாலும், ஆளுமையாலும் கிடைக்கப் பெற்றவை. 

கிருஷாந்தி அம்மையார் இன்றிய புற்றுநோய் வைத்தியசாலை என்பது வெறும் உயிரற்ற, பாழடைந்த கட்டிடமாகவே இருக்குமென்பது சாதாரண நோயாளர்களில் தொடங்கி சுகாதார அமைச்சு வரை அனைவரிற்குமே தெரிந்த விடயம். 

அதனாலேயே, அண்மைக்காலமாய், சில கொடூர எண்ணம் கொண்ட விசமிகள் அவரிற்கெதிரான அவதூறுகளையும், வசைபாடல்களையும், சேறடிப்புக்களையும் எவ்வித முகாந்திரமும் இன்றி பொதுவெளியில் மேற்கொண்டு வருகின்றனர். பல உயரங்களை தொட்ட மதிப்பு மிக்க பெண்மணி, நோயாளர்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர், ஆறுதல் கூற குடும்ப உறவுகள் யாருமற்றவர் என்கின்ற எவ்வித சிந்தனைகளும் இன்றி, மிகப் பகிரங்கமாகவே,அருவருப்பாகவும் அசிங்கமாகவும் வசைபாடி வருகின்றனர். 

கிருஷாந்தி அம்மையாரை காயப்படுத்தி, மனவேதனைக்குட்படுத்தி, அவரின் மன உறுதியை சீர்குலைத்து, நாட்டை விட்டே விரட்டியடிப்பதே இவர்களின் நோக்கம். நாடு முழுவதும், வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை தலைவிரித்தாடுகின்ற சூழ்நிலையில், தானாக முன்வந்து அளப்பரிய சேவையாற்றுகின்ற ஓர் உன்னத வைத்திய நிபுணரை நாட்டை விட்டு விரட்டுவதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன? கிருஷாந்தி அம்மையார் இல்லாத தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை சீர்குலையும் என்பது நன்கு தெரிந்திருந்தும், இவர்கள் எதற்காக இதனை செய்கிறார்கள்? போன்ற இன்னோரன்ன கேள்விகளுடன் இவ்விடயத்தை அணுகிய போதுதான், இதன் பின்னணி புலனாகியது. தற்போது கடும் ஊழல், மோசடி, நிர்வாகச் சீர்கேட்டு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரனவின் பொறுப்பற்ற தனத்தால் பாதுகாக்கப்படும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தேவநேசன், அவரின் நெருங்கிய சகாவான புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் மற்றும் இவர்கள் இருவராலும் பொம்மை போன்று இயக்கப்படுகின்ற, பிழையாக வழிநடத்தப்படுகின்ற, ஏனையவர்களின் பணத்தில் ஓசி வாழ்க்கை வாழ்ந்து பழகி விட்ட ஓர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய மூவரும் மாத்திரமே இவ்வாறான அவதூறுகளை திட்டமிட்டு பரப்பி வருபவர்கள். கிருஷாந்தி அம்மையாரே, தனது ஊழல்,மோசடிகள், நிர்வாகச் சீர்கேடுகள் வடக்கு மாகாண ஆளுநர் முதல் சுகாதார அமைச்சு வரை சென்றதற்கு காரணம் எனக் கருதும் வைத்திய அத்தியட்சகர் தேவநேசனும், அம்மையாரின் பணத்தை முதன்மையாக கருதாத உன்னத சேவையால், ஏழை நோயாளிகளை விட பிரத்தியேக சலுகைகள், முன்னுரிமைகள் பெறுவதற்காக கொழும்பு நோக்கி படையெடுக்கும் வசதி படைத்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதாக கருதும் புற்றுநோய் நிபுணர் ஜெயக்குமாரும், வைத்திய செல்நெறிகள் யாவற்றையும் அப்பட்டமாக மீறி ஓர் பெண் வைத்திய நிபுணரை தரக்குறைவாக விமர்சிப்பதோடு, எவ்வித மனமுதிர்ச்சியோ, ஒழுக்க வரைமுறைகளோ அற்ற ஓர் பாராளுமன்ற உறுப்பினரையும் தமது தேவைகளுக்காய் தவறாக வழிநடத்தி வருகின்றனர். 

ஏற்கனவே, வைத்திய செல்நெறிகளுக்கு மாறாக, நோயாளர்களை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகளை நோக்கி தூண்டுவது, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு வழிப்படுத்துவதை விடுத்து, தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சையை ஆரம்பிப்பது, தனது தொழில்முறை தகைமைகளை காலத்திற்கேற்ப வளர்த்துக் கொள்ளாது தற்போதும் பயன்குறைந்த, அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்ற இரண்டு தசாப்தங்களுக்கு முந்திய பழைய சிகிச்சை முறைகளை கைக்கொள்வது, அதனைக் கூட இடைநடுவில் நிறுத்தி, உரிய மருத்துவத் தரவுகள் எதுவுமின்றி, நோயாளர்களை ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது என, புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜெயக்குமார் பாரிய தவறிழைப்பதாகக் குறிப்பிட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் புகழ்மிக்க வைத்திய நிபுணர்கள் பலரும் கையொப்பமிட்டு சுகாதார அமைச்சிற்கு அனுப்பிய கடிதமும் அதனைத் தொடர்ந்து ஊடகங்களில் தன்னையோர் பொதுநலன் சார்ந்தவனாக காட்டி வைத்திய நிபுணர் ஜெயக்குமார் ஆடிய நாடகங்களும் பிரசித்தமானவை. அவரின் இத்தகைய தொடர்ச்சியான செயற்பாடுகள், அவர் மீதான நன்மதிப்பை குறைப்பதுடன், கிருஷாந்தி அம்மையார் மீதான அவரின் பொறாமையும், தனிப்பட்ட தொழில்வளர்ச்சி நோக்கிய அவரின் அண்மைக்கால உருமாற்றமுமே, இத்தகைய நெறி தவறிய கீழ்தர செயற்பாடுகளுக்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது. 

எவ்வாறாயினும், ஓர் பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்ற வகையில், நோயாளரின் நலனை முன்னிறுத்தி செயற்படும் கிருஷாந்தி அம்மையாரின் பாதுகாப்பையும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அவரின் சேவையையும் எமது சங்கம் உறுதி செய்யும் என்பதோடு, அவதூறு பரப்புவர்களுக்கெதிரான நடவடிக்கைகளிலும் முன்நிற்கும். இது தொடர்பில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஆளுநர் முதற்கொண்டான மாகாண நிர்வாகத்திற்கும், மத்திய சுகாதார அமைச்சிற்கும் பலமுறை எழுத்து மூலம் முறையிட்டுள்ளதோடு, அவர்களுடனான பல கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளோம். எனினும், புற்றுநோயாளரிற்கான சேவைகளை முழுமையாக முடக்கக்கூடிய இப்பாரிய பிரச்சினையில், அவர்கள் சிறிதளவே கரிசனை கொண்டிருப்பதோடு, காத்திரமான தலையீடுகள் எவற்றையும் மேற்கொள்ளவில்லை. எனவே, நோயாளரின் நலன் சார்ந்த எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளதோடு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை, தமது இழந்த பெருமை மிகு காலங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளிலும் எம்மை முழுமையாக அர்ப்பணிக்க தீர்மானித்துள்ளோம்.என தெரிவித்தார்

No comments