புதிய தமிழரசின் பங்காளி டக்ளஸ் கொலையாளி:சிறீதரன்!
உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற ஈபிடிபி கட்சியுடன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பேச்சுக்களை நடத்தியுள்ள நிலையில் முன்னாள் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜவை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், முன்னாள் கிராம அலுவலர் சிவராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆயுதக்குழுவும் 2001ம் ஆண்டின் டிசெம்பர் மாதத்தில் நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டனர்.
ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டதுடன் 28 பேர் படுகாயமடைந்தனர்.மாவை.சேனாதிராஜா கொட்டன் பொல்லுககளாலும், துப்பாக்கிகளாலும், வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு நினைவிழக்குமளவு காயமுற்றிருந்ததாகவும் சிறீதரன் நினைவுகூர்ந்துள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம் ஈபிடிபி கட்சியுடன் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பேச்சுக்களை நடத்தியமை பற்றி தனக்கு எதுவும் தெரியாதென தெரிவித்துள்ள சிறீதரன் சந்திப்பு மத்திய குழு தீர்மானப்பிரகாரம் நடக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment