தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட ஈழத்தின் மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் காலமானார்.

ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் (வயது 80) இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தனது படைப்புகள் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வலுச் சேர்ந்த அவர், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கிளிநொச்சி - திருவையாறு தபாலகத்தின் உதவித் தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார் 1960களில் இலக்கியத் துறைக்குள் பிரவேசித்தார்.
இலங்கை வானொலியில் நாடக எழுத்தாளராக பணியாற்றிய அவர், போர்க்காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். இக்காலத்தில் ஒலிப்பரப்பான உயிர்த்தெழுகை, உயிர் குடிக்கும் பறவைகள், சாம்பல் பறவைகள், காவல் வேலி போன்ற நாடகத் தொடர்கள் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தின.
1993இல் ஈழநாதம் நாளிதழ் வன்னிப் பிராந்தியத்துக்கான பதிப்பை தொடங்கிய போது அதன் ஆசிரியராக பணியாற்றினார். 1995 வரை வன்னி ஈழநாதத்தின் ஆசிரியராக அவர் தொடர்ந்து பங்காற்றினார். யாழ்ப்பாணத்தில் “புதுவிதி” வார இதழின் கௌரவ ஆசிரியராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
மேலும் கண்ணீர் மழலைகள், விடுதலை முழக்கம் உட்பட பல தொடர் நவீனங்களை எழுதிய அவர் பலநூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்துள்ளார். தவிர போர்க் காலத்தில் பல வீதி நாடகங்களையும் உருவாக்கியிருந்தார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளை சந்திரசேகர ஆசாத், யோகநாராயணன், விஷ்ணுபுத்திரன், அக்கினீஸ்வரன் என்ற புனை பெயர்களிலும் நா.யோகேந்திரநாதன் என்ற இயற்பெயரிலும் எழுத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போரை ஆவணமாக்கும் பெருமுயற்சியில் அளப்பரிய பங்காற்றிய அவர் போராட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு நீந்திக் கடந்த நெருப்பாறு, (முள்ளிக்குளத்திலிருந்து கிளிநொச்சிவரை), நீந்திக்கடந்த நெருப்பாறு (கிளிநொச்சியிலிருந்து புதுமாத்தளன் வரை), மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவல்களைப் படைத்திருந்தார்.
கடும் சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் ஆனையிறவை விடுதலைப் புலிகள் வெற்றிகொண்ட வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக 39 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவலை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இடது சாரிக் கொள்கையை மாறாத பற்றுடன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய அவர் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக அளப்பரிய பங்காற்றினார். இதனால் பல்வேறு இன்னல்களுக்கும் அவர் முகம் கொடுத்திருந்தார். சமூக ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் விதமாக இடிபடும் இரும்புக் கோட்டைகள் என்ற நாவலையும் இவர் படைத்திருந்தார்.
போர்க்காலத்தின் பின்னர் இவர் எழுத்திய 3 நாவல்கள் தேசிய ரீதியில் விருதுகளை வென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான காட்டு நிலா, என்ற வானொலி நாடகம் நூலாக வெளியாகியிருந்தது.
யோகேந்திரநாதன் படைப்புத்துறை தவிர்த்து கூத்துக் கலைஞராக, அரங்க நாடக நடிகராக வீதி நாடகத் தயாரிப்பாளராக, வானொலி நாடக தயாரிப்பாளராக, குரல் வழங்குநராக, சிறந்த விமர்சகராக, பேச்சாளராக எனப் பல் துறை ஆளுமையாளராக மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment