தலைவரேயின்றி தனித்திருக்கும் தமிழரசு: கூட்டமைப்புக்கு எவ்வாறு உரிமை கோருவது? பனங்காட்டான்
தலைவரேயின்றி தனித்திருக்கும் தமிழரசு கூட்டமைப்புக்கு எவ்வாறு உரிமை கோருவது? ஜனாதிபதித் தேர்தலில் சங்கை எதிர்த்துவிட்டு இன்று சங்குக்காக அழுது புரள்வதா?
கூட்டமைப்புக்குள் பிந்தி வந்து சேர்ந்தவர் முந்தி வந்தவர்களை திருடர்கள் என்கிறார். அப்படியானால் அவர்களுடன் ஏன் இணைந்தார் என்பதற்கு பதில் என்ன? தனித்திருக்கும் தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பு என்று எவ்வாறு அழைக்க முடியும்? ஜனாதிபதித் தேர்தலில் சங்கை ஒழிப்பேன் என்று சபதமிட்டுத் தோற்றவர் இப்போது அதே சங்குக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஒரு மாதம் முடிவடையும் வாரம் இது. புதிய ஜனாதிபதி சரியாக அவரது ஆசனத்தில் இருந்து எழும்புவதற்கு முன்னரே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டாரென தோற்றவர்கள் குற்றப்பட்டியலை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
ஒரு ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களுக்கானது. ஆனால், நான்கு வருடங்கள் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் மூன்றாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸ்ஸநாயக்க பதவியேற்றார் என்றால், இலங்கையின் அரசியல் எவ்வாறு பயணிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
இந்தப் பயணத்தில் பொதுத்தேர்தலும் வந்துள்ளது. தமது கட்சியின் மூன்று எம்.பிக்களுடன் நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்பதால், பெரும்பான்மை பலத்தை வேண்டி பொதுத்தேர்தல் நடத்தும் தேவை புதிய ஜனாதிபதிக்கு எற்பட்டுள்ளது.
எப்படியாவது அவருக்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை (113 ஆசனங்கள்) வழங்கக்கூடாதென்பதில் சஜித் பிரேமதாச அணி குறியாக உள்ளது. அடுத்த பிரதமராக சஜித் வருவாரென்ற இலக்கு இவர்களின் பரப்புரையில் முதலிடம் பெறுகிறது. ஐக்கிய தேசிய கட்சியும், பொதுஜன பெரமுனவும் இவ்விடயத்தில் சஜித் அணியுடன் மோதும் நிலையில் காணப்படவில்லையென்பது தெற்கின் அபிப்பிராயம்.
இருபத்தியிரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் அநுர குமாரவின் கட்சி போட்டியிடுகின்றது. தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் ஒரு டசினுக்கும் மேலான ஆசனங்களைப் பெற முடியுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு இயைவாக தமிழர் தரப்பு தேசியம், ஜனநாயகம் என்று மட்டும் இல்லாமல் பினாமிகளாக பெருமளவு சுயேட்சைகள் களமிறங்கியுள்ளன. இவர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் சொல்லலாம்.
தமிழர்களின் தலைமைக் கட்சியென்று நீண்ட காலமாக மதிப்பு பெற்று வந்த தமிழரசுக் கட்சி மூன்றாக பிளவுபட்டிருப்பினும், தமிழரசின் ஆதரவாளர்களான வேறு பலர் வெவ்வேறு அணிகளிலும் போட்டியிடுகின்றனர். தலைவர் என்று ஒருவர் இல்லாத அந்தக் கட்சி குருவிச்சை, ஒட்டகம், பிசாசு என்ற பெயர்களின் பின்னால் அந்தரப்படுகிறது.
கட்சியின் புதிய தலைவராகத் தெரிவான சிவஞானம் சிறீதரன் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக அப்பதவியில் தொடர முடியாத நிலைமை. அதனால், கட்சியின் தலைவராகத் தொடர்ந்திருந்த மாவை சேனாதிராஜா தேர்தல் கால அதிருப்திகள் காரணமாக பதவியைத் துறந்து அறிக்கைகளுடன் அரசியல் நடத்துகிறார். இதனால் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவ்வப்போது சில கூட்டங்களில் தலை காட்டுவது தெரிகிறது. அண்மையில் வைரலான காணொளி ஒன்றினால் இவர் நன்கறியப்பட்டுள்ளார். அறுந்துபோவான், குறுக்காலை போவான், பிசாசு என்று முறையே முன்னாள் தலைவரையும், பெருந்தலைவரையும், இன்று தலைமைப் பதவிக்கு ஓடித் திரிபவரையும் இவர் வர்ணித்திருந்ததை தவறான விடயம் என்று இதுவரை யாருமே கூறவில்லை.
அதேசமயம், பிசாசு என்று வர்ணிக்கப்பட்டவருடன் பொது நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து பங்குபற்றி வருவதைப் பார்க்கும்போது, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்த ஒரு விடயம் பளிச்சென நினைவுக்கு வருகிறது. 'தேவைப்பட்டால் நான் பேயுடனும் சேருவேன்" என்ற ஜே.ஆரின் கூற்றையே சீ.வீ.கே.சிவஞானம் அவர்களும் பின்பற்றுகிறார் போலும் (பேயும் பிசாசும் ஒன்றுதான்). இதுதான் தமிழரசின் இன்றைய அலங்கோல நிலை.
தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என்ற பதவிப் பெயருடன் தொடரும் சுமந்திரன் தேர்தல் கால நிகழ்வுகளில் தெரிவிக்கும் கருத்துகள் ஊடகங்களுக்கு ஊட்டச் சத்துள்ள தீனி. விளாசித்தள்ளும் இவரது கருத்துகள் இவரை நோக்கியே திரும்பித் தாக்குமென இவர் நினைப்பதில்லைப்போல் தெரிகிறது. அண்மையில் இவர் தெரிவித்த இரண்டு விடயங்களை உதாரணத்துக்குப் பார்க்கலாம்.
'கூட்டமைப்பின் பெயரை களவாடி உரிமை கோருபவர்கள், திருடர்கள் - கப்பம் பெற்றவர்கள் - கடத்தல்காரர்கள் - கொலையாளிகள். இவர்கள் திருந்தி விட்டனரென்றே சேர்த்துக் கொண்டோம்" என்ற சுமந்திரனின் பகிரங்க அறிவிப்புக்கு தாராளமாக பிரசித்தம் கிடைத்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது 2001ம் ஆண்டு அக்டோபர் 20ம் திகதி விடுதலைப் புலிகளின் நேரடிப் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய நான்கு அணிகளும் ஆரம்பத்தில் இதில் இணைக்கப்பட்டவர்கள். பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இக்கூட்டிலிருந்து வெளியேறியதையடுத்து அந்த இடத்துக்கு தமிழரசுக் கட்சி இணைக்கப்பட்டது. கூட்டமைப்பின் உருவாக்கத்தின்போது தமிழரசுக் கட்சியோ அதன் வீடு சின்னமோ இடம்பெறவில்லை.
2009 முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடினால் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது. செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு வெளியேறினர். 2010 பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியின் தலைவராக அப்போதிருந்த சம்பந்தனால் தமிழரசுக் கட்சி ஊடாக தேசியப் பட்டியல் எம்.பியாக கொண்டு வரப்பட்டவர் சுமந்திரன். 2015 தேர்தலில் 58,043 வாக்குகள் பெற்ற இவர் 2020 தேர்தலில் 27,384 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதுவும்கூட சிறீதரனின் அணைவினால் பெற்றவை என்பது பகிரங்க ரகசியம்.
இதனூடாக முக்கியமான ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளலாம். 2001ல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது சுமந்திரன் எங்கிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. 2001, 2004, 2010 தேர்தல்களின்போது கூட்டமைப்புக்காக இவர் பரப்புரை செய்தவரும் அல்ல. ஏதோவொரு காரணத்துக்காக சம்பந்தனால் இவர் தேசியப்பட்டியல் ஊடாக எம்.பி.யாக்கப்பட்டார் என்பதே வரலாறு.
அப்போது கூட்டமைப்பில் ஏற்கனவே இருந்த கட்சிகள் (சுமந்திரன் இன்று திருடர்கள், கொலைகாரர்கள் என்று பட்டம் சூட்டப்படுபவர்கள்) இவரது வரவை எதிர்க்கவும் இல்லை. ஆனால், சுமந்திரன் இப்போது கூறும் விடயங்களைப் பார்க்கையில், தாமே கூட்டமைப்பில் ஏற்கனவே இருந்தது போலவும், மற்றையவர்கள் பின்னர் அதற்குள் இணைந்தது போலவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக படம் காட்டுவதாக உள்ளது.
இப்போது இவர் சொல்லுவது போன்று அந்தக் கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் திருடர்கள், கொலையாளிகள் என்று தெரிந்திருந்தால், அவர்களுடன் இணைந்து அரசியல் செய்ய எவ்வாறு இவர் இணங்கினார் என்ற கேள்விக்கு என்ன பதில்?
கூட்டமைப்பு என்பதன் பொதுவான அர்த்தம், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லது அமைப்புகள் ஒன்றிணைநது இயங்குவது என்பது. சுமந்திரனின் தமிழரசுக் கட்சி பல துண்டுகளாக பிளவுபட்டு இன்று தனித்து தொங்குகிறது. இவ்வாறான தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பு என்று எவ்வாறு சொல்ல முடியும்?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது தேர்தல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒன்றல்ல. இதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யுமாறு அதன் பங்காளிகள் பல தடவை கேட்டபோது அதனை அடியோடு மறுத்து வந்தவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே. தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அதன் மற்றைய பங்காளிகள் அதனைத் தமக்காகப் பயன்படுத்துவதை எவரும் தவறென கூற முடியாது. இருப்பினும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய மற்றைய மூன்றும் தங்களை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது கூட்டணி என்று அழைப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனித்து விடப்பட்டுள்ள உடைந்த ஒரு குழுவான தமிழரசுக் கட்சிக்கு கூட்டமைப்பு உரித்தானது என்று கூறுவதானது முந்தி வந்த காதை பிந்தி வந்த கொம்பு மறைக்க முயல்வது போலானது. சுமந்திரனின் அடுத்த விடயம் சங்கு சின்னத்துக்காக குரல் கொடுப்பது.
கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பகிரங்கமாக ஆதரித்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்ட சுமந்திரன், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பொதுவேட்பாளர் அரியநேத்திரனை மிக மோசமாக எதிர்த்து பரப்புரை செய்தவர். சங்குச் சின்னத்தையும் இவர் விட்டு வைக்கவில்லை. அரியநேத்திரனை தோற்கடிப்பேனென சூளுரைத்து வீரவசனம் பேசியதோடு சங்குச் சின்னத்தை தூக்கி எறியுமாறு கோரி நின்றவர்.
எக்க ராஜ்ய கொள்கையுடன் வடக்கில் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவேன் என்று அறிவித்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக களமாடிய சுமந்திரனின் முகத்தில் கரி பூசி, இரண்டேகால் லட்சம் தமிழ் தேசிய வாக்குகளை அரியநேத்திரனுக்கு பெற்றுக் கொடுத்தது சங்கு சின்னமே. இதனை பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய அணியொன்று தனக்காகப் பெற்றுக்கொண்டதை பொறுக்க முடியாத சுமந்திரன் சங்கு சின்னத்துக்காக இன்று அழுது புரள்கிறார். சங்கை களவாடி விட்டதாக இவர் போடும் கூக்குரலுக்கு என்ன பெறுமதி?
தமிழ்த் தேசியத்தின் சின்னமாகத் திகழும் சங்கு தனது அணியை காணாமல் செய்துவிடுமென்ற அச்சம் இவரிடம் அதிகமாகவே காணப்படுகிறது. தேர்தல் பரப்புரை என்றால் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தங்கள் கொள்கைகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதே வழமை. ஆனால் இன்று, கூட்டமைப்பு யாருக்குச் சொந்தம் என உரிமை கோருவதும், சங்கு சின்னத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதுமே என்ற நிலைக்கு தமிழரசின் சுமந்திரன் அணி இறங்கியுள்ளது.
மாட்டின் வால் போன்று கீழ் நோக்கி வளர்ச்சி காணும், தலைவரென எவரும் இல்லாத தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை சங்கும், சைக்கிளுமே தீர்மானிக்குமென பரவலாக சொல்லப்படுவதை அறிவதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
Post a Comment