வடகிழக்கிலுள்ள சிங்கள பொலிஸார் கோடீஸ்வரர்கள்!
சட்டம் ஒழுங்கு தொடர்பான விடயத்தில் வடக்கு, கிழக்கில் சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இல்லை. அங்கு பணியாற்றும் பெரும்பான்மையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தென் பகுதிகளில் குற்றமிழைத்தவர்களே. அரசியல்வாதிகளிடம் சொத்துக்கள் தொடர்பில் ஆவணங்களை கோருவது போன்று வடக்கு, கிழக்கில் பணியாற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளின் சொத்து மதிப்பீட்டு பத்திரங்களை கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்பகுதிகளில் அமைக்கும் தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கான பணத்தை வடக்கில் வசூலிக்கும் நடவடிக்கைகளிலேயே அவர்கள் ஈடுபடுகின்றனர். வீதிகளில் இலஞ்சம் பெறுவது, முன்னாள் போராளிகளை வதைத்து லஞ்சம் பெறுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு கடமையாற்றிய நீதிபதியைக் கூட வெளியேற்றுமளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன. உளவுத் துறையினருக்கும், பொலிஸாருக்கும் பணம் தேவைப்படும் போது முன்னாள் போராளிகளை அச்சுறுத்தி கப்பம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஒற்றையாட்சிக்குள் இதனை சீர்செய்ய முடியாது. தமிழ்த் தேசியத்தை அங்கீகரித்து சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வாருங்கள் அதன்மூலம் மட்டுமே இந்த நாட்டை கட்டி யெழுப்ப முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்
Post a Comment